Saturday, 5 July 2014

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்''
டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்
"மூன்று முகம்'' படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை, டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் வெளியிட்டார்.

"சண்டைக் காட்சிகளில் எல்லோரையும் ரஜினி அசர வைத்தார்'' என்று அவர் கூறினார்.

டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் பத்திரிகையாளராக இருந்து, டைரக்டராக உயர்ந்தவர். எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி'' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.

"மூன்று முகம்'' படத்தை இயக்கியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

"பீட்டர் செல்வகுமார் எழுதிய மூன்று முகம் கதையை படமாக்குவது என்று சத்யா மூவிஸ் முடிவு செய்ததும், பட வேலைகள் தொடங்கின.

ரஜினி கேட்ட கேள்வி

படத்தின் டைரக்டர் யார் என்று ஆர்.எம்.வீ.யிடம் ரஜினி கேட்டிருக்கிறார். அவர் எனது பெயரை சொல்லியிருக்கிறார். "அவர் இயக்கிய படம் எதையும் இதுவரை நான் பார்த்ததில்லையே!'' என்று சொல்லியிருக்கிறார், ரஜினி.


உடனே ஆர்.எம்.வீரப்பன், "எங்கள் சத்யா மூவீசுக்கு எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் ஜெகந்நாதன்'' என்று கூறியிருக்கிறார்.

"நான் இதயக்கனி படத்தை பார்க்க வேண்டுமே'' என்று ரஜினி சொல்ல மறுநாளே "இதயக்கனி'' படத்தை ரஜினிக்கு காட்ட ஏற்பாடு செய்தார், ஆர்.எம்.வீ.

ரஜினி, நான், சத்யா மூவிசின் மானேஜர் பழனியப்பன் மூவரும் படம் பார்த்தோம். படம் முடிந்ததும், "இந்தப்படத்தை எந்த வருஷம் இயக்கினீர்கள்?'' என்று ரஜினி கேட்டார். "1974-ம் வருஷம் எடுக்கப்பட்டு 1975-ல் ரிலீசானது'' என்றேன்.

உடனே ரஜினி, 1974-ல் நான் சினிமாவுக்கு வரவில்லை. அப்போதே எம்.ஜி.ஆர். சாரை வைத்து படம் இயக்கியிருக்கிறீர்கள். நான் நடிக்கும் இந்தப் படத்தை நீங்கள் இயக்குவதில் எனக்கு மகிழ்ச்சிதான்'' என்றார்.

பிரமிக்க வைத்த ஸ்டைல்கள்

படத்தில் நடிக்கும்போது, ரஜினியிடம் நான் கண்ட வேகம் பிரமிப்பானது. காக்கி சீருடையில் அலெக்ஸ் பாண்டியனாக அவர் காட்டிய கம்பீரம், செட்டில் நடக்கும்போது வெளிப்பட்ட அந்த மிடுக்கு, போலீஸ் நிலையத்தில் ஒரு குற்றவாளியிடம் பேசிக்கொண்டே இன்னொரு ரவுடியை உதைக்கும் ஸ்டைல் என படம் முழுக்க அதிரடி ஸ்டைல்களை வெளிப்படுத்தினார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சென்னை துறைமுகத்துக்கு வந்திருந்த சரக்கு கப்பலில் 3 நாள் அனுமதி பெற்று எடுத்தோம். இந்த கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த பட அதிபர் ஏவி.எம்.சரவணன் பாராட்டியபோது, "மூன்றே நாளில் எடுத்து முடித்தோம்'' என்று சொன்னோம். அவருக்கு ஒரே ஆச்சரியம். "எப்படியும் ஒரு வாரமாவது ஆகியிருக்கும் என்று நினைத்தேன் என்று கூறினார்.

புதுமையான சண்டைக்காட்சி

இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் ஒரு புதுமை செய்தேன். ரஜினி பறந்து வந்து ரவுடிகளை அடித்து உதைப்பதாக வரும் காட்சியில், ஒரு தடவை `ஜம்ப்' செய்யும்போதே, 4 பேரை உதைப்பது போல் காட்சி அமைத்தேன்.

இந்த சண்டைக்காட்சியை பார்த்ததும் ரஜினி ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தார். "நீங்கள் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்'' என்று பாராட்டினார்.


படம் ரிலீசாகி 150 நாட்களுக்கு மேல் ஓடியது. படத்துக்கான பாராட்டு விழா மதுரையில் நடந்தபோது போலீஸ் டி.ஐ.ஜி. ஒருவர் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, "போலீஸ் துறையில் பயிற்சி எடுப்பவர்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுத்து உருவாக்குகிறோம். இதுவரை அப்படிச் செய்தோம். இனி பயிற்சி அவசியமில்லை. `மூன்று முகம்' படத்தை அவர்களுக்கு போட்டுக் காட்டினாலே போதும். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது'' என்று பாராட்டினார்.

ஒரு பிடி சோறு

சண்டைக் காட்சிகளில் நடிக்க நேரும்போது ரஜினி சரிவர சாப்பிட மாட்டார். இப்படித்தான் ஒரு நாள் மதிய சாப்பாட்டு நேரம் வந்தது. ரஜினி வீட்டில் இருந்து மணக்க மணக்க மீன் குழம்பு சாப்பாடு வந்திருந்தது. மதியம் `பிரேக்' டைமில் ரஜினி என்னிடம், "சார்! இன்றைக்கு என்னோடு சாப்பிட வாங்க'' என்று கேட்டுக்கொண்டார்.

சாப்பாட்டு நேரத்தில் ரஜினி `லஞ்ச் பாக்சை' திறந்தார். மீன் குழம்பு வாசனை தூக்கியடித்தது. அந்த வாசனையை முகர்ந்தவர், மொத்த சாப்பாட்டையும் என் பக்கம் திருப்பி வைத்து, "இது உங்களுக்குத்தான்'' என்றார். ஒரு கரண்டி அளவுக்கு சாதம் எடுத்து அதில் கொஞ்சமாய் ரசம் மட்டும் ஊற்றி சாப்பிட்டார்.

ஒரு கை சாதம் மட்டும் அவர் சாப்பிட்டதில் எனக்கு அதிர்ச்சி. "ஏன் இப்படி?'' என்று கேட்டேன். அதற்கு அவர், "சண்டைக் காட்சியில் நடிக்கும்போது நிறைய சாப்பிட்டால் ரசிகர்கள் விரும்புகிற மாதிரி காட்சி அமையாது'' என்றார்.

ரஜினி மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நடந்தபோது மணமக்களை நானும் வாழ்த்தினேன். என்னைப் பார்த்ததும் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவிடம், "இவர் மூன்று முகம் படத்தின் டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் '' என்று அறிமுகப்படுத்தினார். மூன்று முகத்துடன் என் முகமும் அவருக்குள் பதிந்து போனதை, அந்த நேரம் எனக்குள் பெருமிதமாக உணர்ந்தேன்.''

இவ்வாறு டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் கூறினார்.

("கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி - நாளை)

ரஜினி நடித்த திரைப்படங்கள்

81 அந்தா கானூன் (இந்தி) 07-04-1983 டி.ராமராவ்

82 தாய்வீடு 14-04-1983 ஆர்.தியாகராஜன்

83 சிவப்பு சூரியன் 27-05-1983 முக்தா சீனிவாசன்

84 ஜீத்ஹமாரி (இந்தி) 17-06-1983 ஆர்.தியாகராஜன்

85 அடுத்த வாரிசு 07-07-1983 எஸ்.பி.முத்துராமன்

86 தங்கமகன் 04-11-1983 எஸ்.ஏ.ஜெகநாதன்

87 மேரி அதாலத் (இந்தி) 13-01-1984 ஏ.டி.ரகு

88 நான் மகான் அல்ல 14-01-1984 எஸ்.பி.முத்துராமன்

89 தம்பிக்கு எந்த ஊரு 20-04-1984 ராஜசேகர்

90 கை கொடுக்கும் கை 15-06-1984 மகேந்திரன்

91 இதோ நா சவால் (தெலுங்கு) 16-06-1984 புரட்சிதாசன்

92 அன்புள்ள ரஜினிகாந்த் 02-08-1984 கே.நட்ராஜ்

93 கங்குவா (இந்தி) 14-09-1984 ராஜசேகர்

94 நல்லவனுக்கு நல்லவன் 22-10-1984 எஸ்.பி.முத்துராமன்

95 ஜான் ஜானி ஜனார்த்தன் (இந்தி) 26-10-1984 டி.ராமராவ்

96 நான் சிவப்பு மனிதன் 12-04-1985 எஸ்.ஏ.சந்திரசேகர்

97 மகா குரு (இந்தி) 26-04-1985 எஸ்.எஸ்.ரவிச்சந்திரன்

98 உன் கண்ணில் நீர் வழிந்தால் 20-06-1985 பாலுமகேந்திரா

99 வா பாதர் (இந்தி) 19-07-1985 தாசரி நாராயணராவ்

100 ஸ்ரீராகவேந்திரா 01-09-1985 எஸ்.பி.முத்துராமன்

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''
ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்த "மூன்று முகம்'', அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தியது.

குறிப்பாக, அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்காகவும், கம்பீரமாகவுமë பேசி எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.

ஆர்.எம்.வீரப்பனின் "சத்யா மூவிஸ்'' தயாரித்த சூப்பர் ஹிட் படம் இது. கதையை பீட்டர் செல்வகுமார் எழுத, ஆர்.எம்.வி. திரைக்கதை அமைத்தார். பிறகு செல்வகுமார் வசனம் தீட்டினார். ஏ.ஜெகந்நாதன் டைரக்ட் செய்தார்.

கதை

திருப்பங்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் நிறைந்த படம் "மூன்று முகம்.''

நேர்மையும், கண்டிப்பும் நிறைந்த போலீஸ் "டி.எஸ்.பி'' அலெக்ஸ் பாண்டியன், தனது எல்லைக்குள் நடமாடும் கள்ளச்சாராய கோஷ்டிகளை களையெடுக்கிறார். இதனால் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் கள்ளச்சாராய கும்பலின் தலைவன் (செந்தாமரை) டி.எஸ்.பி.யை கொல்ல முடிவெடுக்கிறான். அதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.

மர்மக்குரல்

அலெக்ஸ் பாண்டியனìன் மனைவி ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாÖë. மனைவியை பார்க்க ஆஸ்பத்திரி வரும் வழியில் அலெக்ஸ் பாண்டியனுக்கு போன் வருகிறது. போனில் பேசிய பெண், ஒரு பாழடைந்த பங்களாவில் தன்னை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள்'' என்று பதட்டமாய் கூறியவள், தான் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் பங்களா இருக்கும் இடத்தையும் கூறி தன்னைக் காப்பாற்ற வரும்படி கதறுகிறாள்.

இந்தப் போனுக்குப் பின்னணியில் தன்னை கொல்ல வகுக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம் பற்றி அறியாத அலெக்ஸ் பாண்டியன், தனியாளாய் அந்த பங்களாவுக்குள் போகிறார். அவருக்காக காத்திருந்த சாராயக்கும்பலின் தலைவனும், அவனது அடியாட்களும் அலெக்ஸ் பாண்டியனை தாக்கி கொன்று விடுகிறார்கள்.

இரட்டைக் குழந்தைகள்

அலெக்ஸ் பாண்டியன் இறந்த அதே நேரத்தில் அவரது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டுமே ஆண் குழந்தைகள்.

குழந்தை பிறந்த அதே நேரம் `ஜன்னி' வந்து தாயும் உயிர் விடுகிறாள்.

பிரசவத்துக்கு துணையாக வந்த அலெக்ஸ் பாண்டியனின் தாயார் சகாயமேரி, மகன் - மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைகிறார். குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறாள்.

அதே ஆஸ்பத்திரியில் பணக்காரர் ஒருவரின் மனைவியும் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை குழந்தை இறந்தே பிறந்ததால், இம்முறையாவது குழந்தை உயிருடன் பிறக்கவேண்டுமே என்ற கவலை. ஆனால் இம்முறையும் குழந்தை இறந்தே பிறக்க, அது தெரியாமல் அவள் மயக்க நிலையில் இருக்கிறாள்.

சகாயமேரியிடம் இருக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை பணக்காரர் கேட்கிறார். தனது குழந்தை உயிருடன் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே மனைவியை உயிரோடு பார்க்க முடியும் என்று கண்களில் நீர் மல்க அவர் சொன்னதால், இரண்டு ஆண் குழந்தைகளில் ஒன்றை பணக்காரரிடம் சகாயமேரி கொடுக்கிறாள்.

சகாயமேரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, அவளிடம் இருக்கும் மற்றொரு குழந்தையை வளர்க்க மாதந்தோறும் பணம் அனுப்பி வைக்கிறார்.

சகாயமேரியின் பொறுப்பில் வளரும் குழந்தை `ஜான்' என்ற பெயரிலும், பணக்காரரிடம் வளரும் குழந்தை `அருண்' என்ற பெயரிலும் வளர்கிறார்கள். ஜான் அதிரடி, அடிதடி, ஜாலி என்று உருவாக, அருண் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான்.


பிறந்த நாள்

படிப்பை முடித்து ஊருக்கு வரும் அருண் தனது 25-வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடுகிறான். இந்த விழாவுக்கு கள்ளச்சாராய தலைவனின் அடியாளாக இருந்து இப்போது தொழிலதிபர் அந்தஸ்தில் இருக்கும் சங்கிலிமுருகனும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.

பிறந்த நாள் `கேக்'கை வெட்ட அருண் கத்தியை கையில் எடுக்கும்போது, கேக்கில் ஒரு காட்சி அருண் கண்ணுக்கு தெரிகிறது. அலெக்ஸ் பாண்டியனை கள்ளச்சாராய கும்பலின் தலைவன் செந்தாமரை கத்தியால் குத்துவதாக விரியும் அந்தக் காட்சியை பார்த்த அருண், ஆவேசமாகிறான். தொழிலதிபர் சங்கிலிமுருகனின் சட்டையைப் பிடித்து இழுத்து உலுக்கியவன், "எங்கேடா உங்க பாஸ்?'' என்று கேட்கிறான்.

இந்த தகவல் செந்தாமரைக்குப்போக, அவர் துப்பறிந்து அலெக்ஸ் பாண்டியன் சாய லில் இருக்கும் அருண், பணக் காரரின் மகனல்ல, அலெக்ஸ் பாண்டியனின் மகனே என்பதை அறிந்து கொள்கிறார். இதனால் அவனையும் கொன்றுவிட திட்டம் தீட்டுகிறார். இதற்குள் அருணுக்கும் தனக்குள் தோன்றிய அந்த திடீர் உணர்வுக்கு விடை கிடைக்கிறது. தங்கள் அலுவலக பொறுப்பை மேற்கொள்ளும் அருண், சகாயமேரி என்ற பெண்ணுக்கு தனது அப்பா மாதாமாதம் பணம் அனுப்பி வரும் தகவலை தெரிந்து கொள்கிறான். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு சகாயமேரியின் இருப்பிடம் வருகிறான். அங்கே வந்த பிறகுதான், அலெக்ஸ் பாண்டியனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் தானும் ஒருவன் என்ற உண்மை தெரியவருகிறது.

பழிக்குப்பழி

இரட்டை சகோதரர்கள் தங்கள் தந்தையை கொன்ற செந்தாமரை கும்பலை பழிவாங்க புறப்படுகிறார்கள். இதில் ஜான் முந்திக்கொண்டு, கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த செந்தாமரையின் ஆட்களை வெறியுடன் கொல்கிறான். விபரீதம் உணர்ந்த செந்தாமரை, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஜானை கத்தியால் குத்தி சாய்க்கிறார். அந்தக் கத்தியை பிடுங்கி செந்தாமரையின் வயிற்றில் கத்தியை பாய்ச்சுகிறான் ஜான்.

செந்தாமரை உயிரை விட்டுவிட, குற்றுயிராய் கிடக்கும் ஜானை தனது மடி மíது தூக்கி வைத்து கதறுகிறான் அருண். தனது தந்தையை கொன்ற கும்பலை பழிதீர்த்த நிம்மதியில், தம்பி அருணின் மடியில் உயிரை விடுகிறான், ஜான்.

மூன்று வேடங்களில் நடித்த ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். அலெக்ஸ் பாண்டியனுக்கு ராஜலட்சுமி, அருணுக்கு ராதிகா. ஜானுக்கு ஜோடி இல்லை.

வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த இந்தப்படம் மகத்தான வெற்றி பெற்றது. மூன்று வேடங்களையும், வெகு எளிதாக ஊதித்தள்ளி, ரசிகர்களைக் கவர்ந்தார், ரஜினி.

இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர்-கணேஷ்.

படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்'
படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்! 

ஸ்டைல் மன்னனாகவும், சூப்பர் ஸ்டாராகவும் மதிக்கப்பட்ட ரஜினிகாந்தை, ஒரு மகா நடிகராக உயர்த்திய படம் "எங்கேயோ கேட்ட குரல்.''

"பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்'' பேனரில் பஞ்சு அருணாசலம் தயாரித்த படம் இது. கதை-வசனத்தை அவரே எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

மாறுபட்ட படம்

ரஜினிகாந்த் நடித்த படங்களில் முற்றிலும் மாறுபட்டது "எங்கேயோ கேட்ட குரல்.'' படம் முழுக்க நான்கு முழ வேட்டியுடனும், சாதாரண சட்டையுடனும் தோன்றினார். ஆரம்பத்தில் இளைஞன். படம் முடியும்போது முதியவர்.

இதற்குமுன், "ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், அது குடும்பக் கதை. இது, மாறுபட்ட கதை; யதார்த்தமான கதை; கம்பி மீது நடப்பது போன்ற கனமான கதை. படம் முழுவதும் கிராமத்திலேயே தயாரிக்கப்பட்டது.

பஞ்சாயத்து தலைவர் டெல்லி கணேஷ் - கமலா காமேஷ் ஆகியோருக்கு அம்பிகா, ராதா இருவரும் மகள்கள். பொன்னி (அம்பிகா) படித்தவள். நாகரீகத்தை விரும்புகிறவள். வீட்டு வேலை எதுவும் தெரியாது. அந்த ஊர் பெரியவருக்கு (வி.எஸ்.ராகவன்) செல்லப்பிள்ளை. காமாட்சி (ராதா) குடும்பப் பொறுப்புகளை உணர்ந்தவள்.

இவர்களுக்கு முறை மாப்பிள்ளை ரஜினிகாந்த்.

விருப்பம் இல்லாமலேயே ரஜினியை மணக்கிறார், அம்பிகா. ரஜினி அன்புடன் நெருங்கி வரும்போது, "போய் குளித்து விட்டு வாருங்கள். ஒரே வியர்வை நாற்றம்'' என்பார்.

இந்நிலையில் அம்பிகா கர்ப்பமாவார். அதைக் கலைக்க முயற்சிப்பார். தாயாரும், ரஜினியும் தடுத்து விடுவார்கள்.

குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க மாட்டார்.

சலனம்

இந்நிலையில், அம்பிகா மீது அன்பு செலுத்திய பெரியவரின் மகனும், அவர் மனைவியும் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து விடுகிறார்கள்.

"உன் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. என் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. நீ என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டால், இரு வரும் சேர்ந்து வாழலாம்'' என்று அம்பிகாவிடம் பெரியவரின் மகன் கூறுகிறார். ஒரு நிமிடத்தில் ஏற்படும் சலனத்தால், அவருடன் சென்னைக்கு செல்கிறார், அம்பிகா.

அங்கு சென்றதுமே அவர் மனம் மாறுகிறது. தன் தவறை உணருகிறார். மயக்கம் அடைந்து விழுகிறார். பிறகு, தீக்குளிக்க முயலுகிறார். சிறு காயத்துடன் தப்புகிறார்.

இதற்கிடையே `ஓடிப்போன' அம்பிகாவை, கிராமத்தை விட்டு பஞ்சாயத்து தள்ளி வைக்கிறது. ரஜினியின் துயரத்தைப் போக்க, ராதாவை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அம்பிகாவின் குழந்தையை (மீனா) தன் குழந்தை போல ராதா வளர்க்கிறார்.

இந்த தகவல், அம்பிகாவை அழைத்துச்சென்ற பெரியவர் மகனுக்குத் தெரிகிறது. அதை அம்பிகாவிடம் கூறுகிறார். `கிராமத்துக்கு வெளியே எனக்கு நìலம் இருக்கிறது. அதை உனக்கு எழுதித் தருகிறேன். அங்கே வீடு கட்டிக்கொண்டு நீ வசிக்கலாம்'' என்று கூறி அனுப்பி வைக்கிறார்.

துறவு வாழ்க்கை

மனதில் சலனம் அடைந்தாலும், உடலில் களங்கப்படாத அம்பிகா, தன் கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசை போட்டுக்கொண்டு தன்னந்தனியே துறவி போல் வாழ்கிறார்.

இப்படியே 13 வருடம் ஓடுகிறது. தன் மகள் பருவப்பெண்ணாய் நடமாடுவதை தூரத்திலிருந்தே பார்த்து கண்ணீர் விடுகிறார், அம்பிகா.

நாளடைவில், உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார். தாய்ப்பாசத்தால், அவரை பார்க்க வருகிறார், கமலா காமேஷ். "அம்மா! நான் ஒரு நிமிட சலனத்தால் வீட்டை விட்டு வெளியேறினாலும், உடலில் களங்கப்படாதவள்'' என்று கூறி, நடந்ததையெல்லாம் கூறுகிறார்.

"நீ என் மகள்! நீ களங்கப்பட்டிருக்க மாட்டாய் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது'' என்பார், கமலா காமேஷ்.

"அம்மா! சாவதற்கு முன் அவரை (ரஜினி) ஒரு முறை நான் பார்க்க வேண்டும். மன்னிப்பு கேட்கவேண்டும்!'' என்று தாயிடம் கூறுகிறார், அம்பிகா.

கடைசி ஆசை

அம்பிகா களங்கமற்றவர் என்பதை அறியும் ரஜினி, அவரை பார்க்கச் செல்வார். கணவரை பார்த்துக் கதறுவார், அம்பிகா.

"என் மனதில் நீண்ட காலமாக ஒரு சுமை இருந்தது. நீ களங்கப்படவில்லை என்று அறிந்ததும், அந்த சுமை இறங்கி விட்டது. ஒரு சின்ன சபலம் கூட, ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கி விடும் என்பதற்கு உன் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு'' என்பார், ரஜினி.

"நான் அதிக நாளைக்கு உயிர் வாழமாட்டேன். நான் இறந்தால், எனக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நீங்கள் செய்ய வேண்டும். என்னை அனாதைப் பிணமாக விட்டு விடாதீர்கள். இதுதான் என் கடைசி ஆசை'' என்று கண்ணீருடன் யாசிப்பார், அம்பிகா.

"உன் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவேன்'' என்று கூறிவிட்டு நடப்பார், ரஜினி.

அடுத்த நிமிடமே, ரஜினி விட்டுச்சென்ற செருப்பருகே சுருண்டு விழுந்து உயிர் துறப்பார், அம்பிகா.

இதுபற்றி தகவல் தெரிந்ததும், ஊர் பஞ்சாயத்து கூடும். (பஞ்சாயத்து தலைவர் அம்பிகாவின் அப்பாதான்)

அம்பிகா ஏற்கனவே கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டவர் என்பதால், அவர் உடலை அனாதைப்பிணமாக கருதி தகனம் செய்வது என்று முடிவு செய்யப்படும். தகனச் செலவுகளுக்காக வெட்டியானுக்கு 36 ரூபாய் 50 பைசாவை பஞ்சாயத்து வழங்கும்.

இதை அறியும் ரஜினி, அம்பிகாவின் உடலை தான் தகனம் செய்யப்போவதாக அறிவிப்பார்.

"பஞ்சாயத்தின் கட்டளையை மீறினால், நீங்களும் ஊரை விட்டு வெளியேற வேண்டியதுதான்'' என்று பஞ்சாயத்து தலைவர் கூறுவார்.

அதையும் மீறி, அம்பிகாவின் உடலை தன் இரு கைகளாலும் தூக்கிச்சென்று தகனம் செய்து விட்டு, ஊரை விட்டு வெளியேறுவார், ரஜினி.

ராதாவும், மகளும் அவருடன் செல்வார்கள்.

அம்பிகா நடிப்பு

இப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி, அம்பிகாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். ராதா, கமலா காமேஷ், டெல்லி கணேஷ் ஆகியோரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.

படத்தில் தனியாக காமெடி எதுவும் கிடையாது. 14-8-1982 அன்று இப்படம் வெளிவந்தது. முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பிறகு கூட்டம் அதிகரித்தது. பெண்களை இப்படம் அதிகமாகக் கவர்ந்தது. எனவே நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.


எஸ்.பி.முத்துராமன்

இப்படத்தின் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

"பஞ்சு அருணாசலம் கதையைச் சொன்னதுமே, படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். `பெண்கள் எந்த சபலத்துக்கும் ஆளாகக்கூடாது, மனசால் கூட தப்பு செய்யக்கூடாது என்ற மெசேஜ் இந்தக் கதையில் இருக்கிறது. எனவே இதில் நடிக்கிறேன்' என்றார்.

செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. எல்லோரும் நன்கு நடித்தனர். இளையராஜாவின் `ரீ ரிக்கார்டிங்' (பின்னணி இசை சேர்ப்பு) படத்துக்கு பலமாக அமைந்தது.

இந்தப்படம் வெளிவந்த அதே தேதியில் கமலஹாசன் நடித்த சகலகலா வல்லவனும் வெளிவந்தது. அதுவும் நான் டைரக்ட் செய்த படம்தான். அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தது ஒருவர்தான் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி இரண்டு படங்களும் முற்றிலும் மாறுபட்டவை. இரண்டும் வெற்றிகரமானவை.

"எங்கேயோ கேட்ட குரல்'' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தோம். படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.

ஆனால் தேசிய விருது கிடைக்கவில்லை. என்றாலும் மக்களின் பாராட்டு நிறைய கிடைத்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது''

இவ்வாறு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா''
ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' படத்தில், ரஜினிகாந்தும், ராதிகாவும் இணைந்து நடித்தனர்.

"சாண்டோ'' சின்னப்பதேவர் மறைவுக்குப் பிறகு, தேவர் பிலிம்ஸ் பேனரில் அவர் மகன் சி.தண்டாயுதபாணி, திரைப்படங்கள் தயாரித்தார். 1982-ல் அவர் தயாரித்த படம் "ரங்கா.''

ரஜினி - ராதிகா

இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா நடித்தார்.

முக்கிய வேடத்தில் "கராத்தே'' மணி நடித்தார். ரஜினியுடன் இவர் நடித்த இரண்டாவது படம் இது.

ரஜினியின் அக்காவாக கே.ஆர்.விஜயா நடித்தார். மற்றும் `சில்க்' சுமிதா, ரவீந்தர், மாஸ்டர் சுரேஷ், ஹாஜா செரீப், அசோகன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.

தேவர் பிலிம்ஸ் கதை இலாகா உருவாக்கிய கதைக்கு, தூயவன் வசனம் எழுதினார். வாலியின் பாடல்களுக்கு, சங்கர் - கணேஷ் இசை அமைத்தனர்.

தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.

குடும்ப சென்டிமெண்டும், சண்டைக்காட்சிகளும் நிறைந்த "ரங்கா'', 14-4-1982-ல் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடியது.

டைரக்டர் பேட்டி

இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, டைரக்டர் ஆர்.தியாகராஜன் கூறியதாவது:-

"ரங்கா படத்தில் ரஜினியின் அக்கா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெயலலிதா. அவரிடம் கதையைச் சொன்னோம். தனது கேரக்டர் பிடித்துப்போனதால் ஜெயலலிதா ?ஒப்புக்கொண்டார். அவருக்கான "காஸ்ட்ïம்''கள் கூட தயாராகி விட்டன.


படப்பிடிப்பு தொடங்க இரண்டு நாள் இருக்கிற நிலையில், எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்தது. "அம்முவை (ஜெயலலிதா) இந்தப் படத்தில் போடவேண்டாம். அவரை நான் அரசியலில் கொண்டுவர இருக்கிறேன். நான் கே.ஆர்.விஜயாவிடம் பேசிவிட்டேன். அவர் ரஜினிக்கு அக்காவாக நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார்'' என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

அதன் பிறகு, கே.ஆர்.விஜயாவுடன் பேசினோம். எம்.ஜி.ஆர். அவரிடம் ஏற்கனவே பேசிவிட்டதால், எந்தவித தடங்கலுமின்றி ரஜினிக்கு அக்காவாக நடித்தார்.''

இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

புதுக்கவிதை

கே.பாலசந்தரின் "கவிதாலயா'' தயாரிப்பான "புதுக்கவிதை''யில் ரஜினியும், புதுமுகம் ஜோதியும் இணைந்து நடித்தனர்.

`ஒரு படத்தின் வெற்றிக்கு கதை வலுவானதாக இருக்கவேண்டும்' என்று அடிக்கடி ரஜினி கூறுவார். கன்னடத்தில் வெற்றி கண்ட "நா நின்னே மறியல்லாரே'' என்ற படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் "புதுக்கவிதை.'' இதற்கு வசனம் எழுதியவர் விசு.

ரஜினிக்கு மாறுபட்ட கதை. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் படம் சிறப்பாக அமைந்தது.

சுகுமாரி, சில்க் சுமிதா, தேங்காய் சீனிவாசன், டெல்லி கணேஷ் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.

படத்தின் சிறப்பு அம்சம் இளையராஜாவின் இசை. "வெள்ளைப்புறா ஒன்று...'' உள்பட அனைத்துப் பாடல்களும் ஹிட்டாக அமைந்தன.

11-6-1982-ல் வெளிவந்த இந்தப்படம் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

"டைகர் ரஜினி'' என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது.

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா''வில், ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தனர். இந்தப்படம் 148 நாள் ஓடியது.

இந்தப்படம், "சுட்டலுன்னாரு ஜாக்ரதா'' என்ற தெலுங்குப் படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்டது.

இந்தப்படத்துக்கு, பஞ்சு - அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார். கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதிய பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.

முத்துராமன்

ஏவி.எம்.மின் ஆஸ்தான டைரக்டரான எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

அடிதடி நிறைந்த படம். ரஜினிக்கு ஏற்ற கதை. இரட்டை வேடம். ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்தார்.

இப்படத்தில் ரஜினியுடன் ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, தாம்பரம் லலிதா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், அசோகன் நடித்தனர்.

1982 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 148 நாள் ஓடியது.

பேச்சுத்திறமை

இந்தக் காலக்கட்டத்தில் ரஜினி எப்படி இருந்தார் என்பது பற்றி ஏவி.எம்.சரவணன் கூறியதாவது:-

"இப்போதெல்லாம் மேடைகளில் ரஜினி பிரமாதமாகப் பேசுகிறார். ஆரம்பத்தில் பொது நிகழ்ச்சிகளில் பேசவே கூச்சப்பட்டு, மறுத்து விடுவார்.

எங்கள் தயாரிப்பான "போக்கிரிராஜா'' படத்தின் வெற்றி விழாவில் பேசவேண்டும் என்று ரஜினியிடம் முன்கூட்டியே சொன்னபோது அவர் தயங்கி மறுத்துவிட்டார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்தான் அவரிடம், "பயப்படாதீங்க. நீங்கள் என்ன பேசவேண்டும் என்று நான் காகிதத்தில் எழுதிக் கொடுத்து விடுகிறேன். அதை அப்படியே படித்துவிடுங்கள்'' என்று தைரியமூட்ட, ரஜினி பேச ஒப்புக்கொண்டார்.

பேச்சுத்திறன்

எழுதிக்கொடுத்த பேச்சை, நிகழ்ச்சியின்போது ஓர் ஐந்து நிமிடத்துக்குத்தான் படித்திருப்பார். அவ்வளவுதான். அதன் பிறகு, பேச்சு எழுதப்பட்ட பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, தானே தன்னிச்சையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

இப்போதுகூட, `சாதாரண ஆளான என்னை மேடைப்பேச்சாளராக்கியவர்கள் எஸ்.பி.முத்துராமனும், ஏவி.எம்.சரவணனும்தான்' என்று தவறாமல் தமாஷாகக் குறிப்பிடுவார், ரஜினி''

இவ்வாறு ஏவி.எம்.சரவணன் கூறியுள்ளார்.


தனிக்காட்டுராஜா

இதே ஆண்டு, ரஜினியும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்த மற்றொரு படம் "தனிக்காட்டுராஜா.'' டி.ராமா நாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு, டைரக்ஷனையும் கவனித்தவர் வி.சி.குகநாதன்.

வாலியின் பாடல்களுக்கு, இளையராஜா இசை அமைத்தார்.

இப்படத்தில் ஸ்ரீபிரியா, சத்யகலா, ஒய்.விஜயா, ஸ்ரீலட்சுமி, சில்க் சுமிதா, ஜெய்சங்கர், விஜயகுமார், ராஜேஷ், சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, சங்கிலிமுருகன், வி.எஸ்.ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஐசரி வேலன், செந்தாமரை, ஒய்.ஜி.மகேந்திரன், ஐ.எஸ்.ஆர். என்று ஒரே நட்சத்திரக் கூட்டம் நிறைந்திருந்தது.

12-3-1982-ல் வெளியான இப்படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் "டப்'' செய்யப்பட்டது.

வி.சி.குகநாதன்

இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, படத்தின் டைரக்டரும், கதை-வசன கர்த்தாவுமான வி.சி.குகநாதன் கூறியதாவது:-

"பட அதிபர் ராமா நாயுடு தயாரித்த 4, 5 தெலுங்குப் படங்களை நான் டைரக்ட் செய்து, அவை மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன.

அவர் என்னை அழைத்து, "உங்கள் திறமையாலும், உழைப்பினாலும் பல வெற்றிப் படங்களை என்னால் தயாரிக்க முடிந்தது. உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.

நான் வீடு, கார் என்று ஏதாவது கேட்பேன் என்று அவர் நினைத்தார். ஆனால் நான் வேறு விதமாக என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.

ரஜினி - கமல்

"தமிழில் உங்களுக்காக ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க விரும்புகிறேன். அதில் ரஜினி, கமல் இருவரும் நடிக்க வேண்டும். அவர்களை `புக்' செய்து கொடுங்கள்'' என்று கூறினேன்.

அதற்கு ராமாநாயுடு சம்மதித்தார். ரஜினி, கமல் இருவருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.

படத்தை "70 எம். எம்''ல் பிரமாண்டமாக எடுக்கத் தீர்மானித்தோம்.


கமல் வாபஸ்

ஆனால், திடீரென்று ஒருநாள் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் வந்து ராமாநாயுடுவை சந்தித்தார். ரஜினியும், கமலும் சேர்ந்து நடிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்திருப்பதாகவும், அதனால் இப்படத்தில் கமல் நடிக்க இயலாது என்றும் கூறி, அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இதனால் ராமாநாயுடு வருத்தம் அடைந்தார். என்னை அழைத்து, "என்ன செய்யலாம்?'' என்று கேட்டார்.

"பரவாயில்லை. புகழ் பெற்ற நட்சத்திரங்கள் நிறைய பேரை நடிக்க வைத்து படத்தை சிறப்பாகவே தயாரிப்போம்'' என்றேன்.

அதன்படி பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டதுதான் "தனிக்காட்டுராஜா.''

இவ்வாறு குகநாதன் குறிப்பிட்டார்.

புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்''
புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த "நெற்றிக்கண்'', ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

"கவிதாலயா'' பேனரில் டைரக்டர் கே.பாலசந்தர் தயாரித்த படம் இது.

பொதுவாக, பாலசந்தர் கதை எழுதும் படங்களை அவரே இயக்குவதுதான் வழக்கம். ஆனால், "நெற்றிக்கண்''ணை அவர் டைரக்ட் செய்யவில்லை. ஏற்கனவே, ரஜினியை வைத்து "புவனா ஒரு கேள்விக்குறி'', "முரட்டுக்காளை'' முதலிய வித்தியாசமான படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

வியப்பு-திகைப்பு

"நெற்றிக்கண்''ணை இயக்குவதற்கு பாலசந்தர் அழைப்பு அனுப்பியபோது, முத்துராமன் வியப்பும், திகைப்பும் அடைந்தார்.

`அவரே பெரிய டைரக்டர். அவர் படத்தை நாம் எப்படி டைரக்ட் செய்வது?' என்ற கேள்வி, அவரை பயமுறுத்தியது.

பாலசந்தரை சந்தித்துப் பேசியபின், அவருடைய பயம் மறைந்தது.

பாலசந்தர் சொன்னார்:-

"நான் வித்தியாசமான கதைகளை, என் பாணியில் டைரக்ட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

"நெற்றிக்கண், ரஜினிக்கு முற்றிலும் மாறுபட்ட கதை. இரட்டை வேடம். இதை கமர்ஷியல் படமாக எடுத்தால்தான் நன்றாக இருக்கும். நீங்கள் ரஜினியை வைத்து, சிறப்பான படங்களை எடுத்திருக்கிறீர்கள். ரஜினி ஓர் நடிப்புச்சுரங்கம். அவரிடம் புதைந்துள்ள நடிப்பை, நீங்கள் இப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.

முழு சுதந்திரம்

திரைக்கதை, எழுதுவதுடன் என் வேலை முடிந்து விட்டது. படத்தை உங்கள் விருப்பப்படி எடுக்கலாம். எந்த ஒரு கட்டத்திலும் என் தலையீடு இருக்காது. உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு.


படத்தை சிக்கனமாக எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஏவி.எம். படங்களை எப்படி நிறைய செலவு செய்து எடுக்கிறீர்களோ, அதுபோல் எடுங்கள்.''

இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

இதனால் உற்சாகம் அடைந்த எஸ்.பி.முத்துராமன், "நெற்றிக்கண்''ணை சிறந்த முறையில் உருவாக்கினார்.

அப்பா-மகன்

இதில் அப்பாவாகவும், மகனாகவும் ரஜினி நடித்தார்.

அப்பா ரஜினி உல்லாச பேர்வழி. வேலை கேட்டு வரும் ஒரு பெண்ணை (சரிதா) கெடுத்து விடுவார்.

இது மகன் ரஜினிக்கு தெரிகிறது. அப்பாவை திருத்துவதற்கும், உண்மையை அவர் வாயினாலேயே ஒப்புக் கொள்ளச் செய்யவும், புதிய உத்தியை கையாளுவார். சரிதாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்பார்.

இதனால் அப்பா ரஜினிக்கு இக்கட்டான நிலைமை ஏற்படும். அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சியி னால், அவர் இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவிப்பார்.

கடைசியில் உண்மையை ஒப்புக்கொள்வார். சரிதாவை ஏற்றுக்கொள்ளவும் முன்வருவார்.

ஆனால், "உண்மையை நீங்கள் ஒப்புக்கொண்டீர்களே, அதுவே போதும்'' என்று கூறிவிட்டு சரிதா வெளியேறுவார்.

அப்பாவாகவும், மகனாகவும் நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார் ரஜினி. இரண்டு ரஜினிகளும் நடத்திய "மவுனயுத்தம்'', ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஒரு ரஜினிக்கு மனைவியாகவும், இன்னொரு ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்த லட்சுமியின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. சரிதாவும் சிறப்பாக நடித்திருந்தார். ரஜினியின் மகளாக விஜயசாந்தி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிய பாலசந்தர், வசனம் எழுதவில்லை. அந்தப் பொறுப்பை விசுவிடம் கொடுத்தார். விசுவின் வசனம் கச்சிதமாக அமைந்திருந்தது.

பாடல்களை கண்ணதாசன் எழுத, இசை அமைத்தவர் இளையராஜா.

1981 ஆகஸ்டு 15-ந்தேதி வெளியான "நெற்றிக்கண்'', நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.


இப்படம் தெலுங்கிலும் "டப்'' செய்யப்பட்டு நன்றாக ஓடியது.

ராணுவ வீரன்

அடுத்து ரஜினி நடித்த படம் சத்யா மூவிஸ் தயாரிப்பான "ராணுவ வீரன்.'' இந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார்.

ராணுவத்தில் இருந்து ஊருக்கு திரும்பும் ரஜினி, பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படும் பொதுமக்களுக்கு உதவுவதுதான் கதை.

ரஜினிகாந்த், ஆக்ஷன் ஹீரோவாகத் தோன்றி, அடிதடி சண்டைக் காட்சியில் கைதட்டல் பெற்றார்.

இப்போது தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் சிரஞ்சீவி, இந்தப் படத்தில் ரஜினிக்கு அடுத்த வேடத்தில் நடித்திருந்தார்.

மற்றும் ஸ்ரீதேவி, வசந்தா, நளினி, தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்தவர் "ஓம்சக்தி'' ஜெகதீசன். வசனம்: கிருஷ்ணா.

வாலி, முத்துலிங்கம், புலமைப்பித்தன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு, இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

26-10-1981-ல் வெளியான இப்படமும் நூறு நாள் ஓடியது.

"பந்தி போட்டு சிம்மம்'' என்ற பெயரில் "ராணுவ வீரன்'' தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது.

(ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' - நாளை)

ரஜினி நடித்த திரைப்படங்கள்

படம் வெளியான தேதி டைரக்டர்

41 ப்ரியா (கன்னடம்) 12-01-1979 எஸ்.பி.முத்துராமன்

42 குப்பத்துராஜா 12-01-1979 டி.ஆர்.ராமண்ணா

43 இத்துரு அசாத்யுலே (தெலுங்கு) 25-01-1979 கே.எஸ்.ஆர்.தாஸ்

44 அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்) 14-04-1979 ஐ.வி.சசி
45 நினைத்தாலே இனிக்கும் 14-04-1979 கே.பாலசந்தர்

46 அந்த மைன அனுபவம் (தெலுங்கு) 19-04-1979 கே.பாலசந்தர்
47 அலாவுதீனும் அற்புத விளக்கும் 08-06-1979 ஐ.வி.சசி

48 தர்மயுத்தம் 29-06-1979 ஆர்.சி.சக்தி

49 நான் வாழவைப்பேன் 10-08-1979 டி.யோகானந்த்

50 டைகர் (தெலுங்கு) 05-09-1979 என்.ரமேஷ்

51 ஆறிலிருந்து அறுபது வரை 14-09-1979 எஸ்.பி.முத்துராமன்

52 அன்னை ஓர் ஆலயம் 19-10-1979 ஆர்.தியாகராஜன்

53 அமா எவரிதைன அம்மா (தெலுங்கு) 08-11-1979 ஆர்.தியாகராஜன்
54 பில்லா 26-01-1980 ஆர்.கிருஷ்ணமூர்த்தி

55 ராம் ராபர்ட் ரஹீம் (தெலுங்கு) 31-05-1980 விஜய நிர்மலா

56 அன்புக்கு நான் அடிமை 04-06-1980 ஆர்.தியாகராஜன்

57 காளி 03-07-1980 ஐ.வி.சசி

58 மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு) 19-07-1980 ஆர்.தியாகராஜன்

59 நான் போட்ட சவால் 07-08-1980 புரட்சிதாசன்

60 ஜானி 15-08-1980 மகேந்திரன்

நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார்
ரஜினி-லதா காதலுக்கு வழிவகுத்த "தில்லுமுல்லு'' படம், அவர்களுடைய திருமணத்துக்குப்பின் வெளிவந்து, வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தில், ரஜினிகாந்த் நகைச்சுவை நடிப்பில் முத்திரை பதித்தார்.

பாலாஜியின் "தீ''

ரஜினியின் திருமணத்துக்கு முன்னதாக கடைசியாக ரிலீஸ் ஆன படம் "தீ.'' (26-1-1981) இதைத் தயாரித்தவர் கே.பாலாஜி. இவர் பிற மொழிப் படங்களை தமிழில் மீண்டும் தயாரித்து ("ரீமேக்'') வெற்றிமேல் வெற்றி பெற்றவர்.

இப்படி இவர் ரீமேக் செய்த "பில்லா'' பெரிய வெற்றி பெற்றதால், இந்தியில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற "தீவார்'' படத்தை "தீ'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தார். இதில் ரஜினிக்கு குணச்சித்ர வேடம்.


பாடல்களை கண்ணதாசன் எழுத, வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார்.

ரஜினியுடன் ஷோபா, ஸ்ரீபிரியா, சவுகார்ஜானகி, சுமன், மனோரமா, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, அசோகன், ஏவி.எம்.ராஜன் நடித்தனர்.

இலங்கை நிறுவனத்துடன் கூட்டாக இந்தப் படத்தை பாலாஜி தயாரித்தார். எனவே, இலங்கையிலும் படப்பிடிப்பு நடந்தது.

ரஜினியின் திருமணத்துக்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன் வெளிவந்த இந்தப்படம் இலங்கையில் 100 நாள் ஓடியது. தமிழ்நாட்டில் 60 நாள் ஓடியது.

கழுகு

திருமணத்துக்குப்பின் வெளிவந்த முதல் படம் "கழுகு'' (6-3-1981). பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம். வசனத்தையும், பாடல்களையும் பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசை அமைத்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.

ஒரு போலிச்சாமியாரின் அந்தரங்க ரகசியங்களை கண்டுபிடித்து, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகை நிருபர் ஒருவரைப் பற்றியதுதான் கதை. நிருபராக ரஜினி நடித்தார்.

இந்தப் படத்தில், கதாபாத்திரங்களுடன் ஒரு பஸ் முக்கிய இடம் பெற்றிருந்தது. இதற்காக ஒரு பஸ்சை வாங்கி, அதன் சீட்களை நீக்கிவிட்டு, ஒரு வீடு மாதிரி மாற்றி அமைத்தார்கள். சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் எல்லாம் உள்ளேயே அமைக்கப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், "நடமாடும் வீடு'' மாதிரி இருந்தது இந்த பஸ்!

இந்தப்படம் நடுத்தரமாக ஓடியது. ரஜினி படங்களில் "நடுத்தரம்'' என்றால், லாபம் குறையும். அவ்வளவுதான்!

தில்லுமுல்லு


இதன்பிறகு வெளிவந்த படம் "தில்லுமுல்லு.'' கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா தயாரித்த படம். இந்தப் படத்துக்கான வசனங்களை வாசு எழுதினார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

ரஜினி வாழ்க்கையில், "தில்லுமுல்லு'' முக்கியமான படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான், கல்லூரி மாணவியான லதா ரஜினியை பேட்டி காண வந்தார். காதல் அரும்பி, கல்யாணத்தில் முடிந்தது.

இந்தப்படம், "கோல்மால்'' என்ற இந்திப்படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்டதாகும். ரஜினிக்கு ஜோடியாக மாதவி நடித்தார். மற்றும் தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், நாகேஷ், சவுகார்ஜானகி ஆகியோர் நடித்தனர். கமலஹாசனும், லட்சுமியும் கவுரவ வேடத்தில் தோன்றினர்.

நகைச்சுவை

படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்திருந்தன.

ரஜினிக்கு இரட்டை வேடம் இல்லாவிட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ரஜினி மீசையோடும், மீசை இல்லாமலும் இரண்டு வித தோற்றங்களில் வருவார். இரண்டு தோற்றங்களிலும் வருவது ஒருவரே என்றாலும், "இருவர்'' என்று கூறி தில்லுமுல்லு செய்வார்.

1-5-1981-ல் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

(தொடரும்)

***

ரஜினி நடித்த திரைப்படங்கள்

21 சங்கர் சலீம் சைமன் 10-02-1978 பி.மாதவன்

22 கில்லாடி கிட்டு (கன்னடம்) 03-03-1978 கே.எஸ்.ஆர்.தாஸ்

23 அண்ண தம்முல சவால் 03-03-1978 கே.எஸ்.ஆர்.தாஸ் (தெலுங்கு)

24 ஆயிரம் ஜென்மங்கள் 10-03-1978 துரை

25 மாத்து தப்பித மகா (கன்னடம்) 31-03-1978 பெக்கட்டி சிவராம்

26 மாங்குடி மைனர் 19-05-1978 வி.சி.குகநாதன்

27 பைரவி 02-06-1978 எம்.பாஸ்கர்

28 இளமை ஊஞ்சலாடுகிறது 09-06-1978 ஸ்ரீதர்

29 சதுரங்கம் 30-06-1978 துரை

30 வணக்கத்துக்குரிய காதலியே 14-07-1978 ஏ.சி.திருலோகசந்தர்

31 வயசு பிலி சிந்தி (தெலுங்கு) 04-08-1978 ஸ்ரீதர்

32 முள்ளும் மலரும் 15-08-1978 மகேந்திரன்

33 இறைவன் கொடுத்த வரம் 22-09-1978 ஏ.பீம்சிங்

34 தப்பித தாளா (கன்னடம்) 06-10-1978 கே.பாலசந்தர்

35 தப்புத்தாளங்கள் 30-10-1978 கே.பாலசந்தர்

36 அவள் அப்படித்தான் 30-10-1978 ருத்ரய்யா

37 தாய்மீது சத்தியம் 30-10-1978 ஆர்.தியாகராஜன்

38 என்கேள்விக்கென்ன பதில்? 09-12-1978 பி.மாதவன்

39 ஜஸ்டிஸ் கோபிநாத் 16-12-1978 டி.யோகானந்த்

40 ப்ரியா 22-12-1978 எஸ்.பி.முத்துராமன்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

திருமணத்துக்குப்பின், ரஜினிகாந்த் வாழ்க்கையில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.

முன்பெல்லாம், இரவு நெடுநேரம் கழித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ரஜினி, திருமணத்துக்குப்பின் மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பலானார்.

இதுபற்றி கேட்டவர்களிடம், "முன்பு நான் தனி ஆள். இப்போது எனக்காக ஒருத்தி வீட்டில் தனியாகக் காத்திருக்கிறாளே! அவளுக்காக காலாகாலத்தில் வீட்டுக்குப் போகவேண்டாமா!'' என்று பதிலளித்தார்.


"ஜில்லு''

இனிய சுபாவமும், கருணை உள்ளமும் கொண்டவர், லதா. அவரை ரஜினி செல்லமாக "ஜில்லு'' என்று அழைப்பது வழக்கம்.

லதாவின் முயற்சியால் சிகரெட், மது ஆகியவற்றை படிப்படியாக குறைக்கலானார், ரஜினி. பேச்சில் பொறுமையும், செயல்களில் நிதானமும் ஏற்பட்டன.

"திருமணத்துக்குப்பின் உங்கள் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டனவே'' என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "ஒருவர் திருமணம் செய்து கொள்வதே, மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தானே! அந்த மாற்றங்களைத்தான் இப்போது பார்க்கிறீர்கள்! நேரம் வரும்போது, எல்லாம் தானாகவே நடக்கும்'' என்று ரஜினி பதில் அளித்தார்.

லதா பேட்டி கண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினியை லதா பேட்டி காண்பது போல ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு பத்திரிகை ஏற்பாடு செய்தது. இதற்கு ரஜினி, லதா இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.

அப்போது, லதா கேட்ட கேள்விகளும் ரஜினி அளித்த பதில்களும் வருமாறு:-

லதா:- நீங்கள் எனக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகையை மணந்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்?

ரஜினி:- சினிமா நடிகையும் ஒரு பெண்தானே!

லதா:- படப்பிடிப்புக்குப் போய்விட்டு வீடு திரும்பும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

ரஜினி:- எனக்கு என்ன தோன்றும் என்று உனக்குத்தான் தெரியுமே! எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?'' (`வேண்டாம்' என்றார், லதா வெட்கத்தோடு)


கல்யாணம் ரொம்ப `லேட்'

லதா:- `ஏன் கல்யாணம் செய்து கொண்டோம். பிரம்மச்சாரியாக இருந்திருக்கக்கூடாதா' என்று எண்ணியதுண்டா?

ரஜினி:- உன்னோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும்போது, கல்யாணத்தை எவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று வருத்தப்படத்தான் தோன்றுகிறது.

லதா:- வசதியான வீடு, மனத்திற்கேற்ற மனைவி, சினிமாப்புகழ் இந்த மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?

ரஜினி:- என் தனித்தன்மையை.

லதா:- என்னிடம் இதுவரை சொல்லாத ரகசியமோ, மறைத்து வைத்த விஷயமோ உண்டா? இருந்தால் ஏன் சொல்லவில்லை?

ரஜினி:- என்னிடம் எந்த ரகசியமும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட நீயே இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே, நியாயமா?

முதல் குழந்தை

லதா:- ஒரு மனைவியின் முதல் குழந்தை கணவன் என்கிறார்களே, அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

ரஜினி:- என்னைப் பொறுத்தவரை ஒப்புக்கொள்கிறேன்.

லதா:- குடும்ப வாழ்க்கையில் என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எது அடையாளம்?

ரஜினி:- நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதுதான் அடையாளம்.


லதா:- ஒரு பிரபல நடிகரின் மனைவியாகிய எனக்கு, உண்மையான மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது?

ரஜினி:- என்னுடைய மகிழ்ச்சியில்.

லதா:- என்னைப்போலவே யாராவது டெலிபோனில், `நான்தான் லதா பேசுகிறேன்' என்று சொன்னால் நீங்கள் நம்பிவிடுவீர்களா?

ரஜினி:- என் ஜில்லுவின் குரல் எனக்குத் தெரியாதா என்ன?''

லதா:- மனம் விட்டுச் சொல்லுங்கள். என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எது?

ரஜினி:- முன்பின் தெரியாமல் எல்லோரிடமும் கருணை காட்டுவது!''

மேற்கண்டவாறு பதில் அளித்தார், ரஜினி.

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது
அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

ரஜினிகாந்த் - லதா திருமணம், 26-2-1981 அன்று அதிகாலை திருப்பதியில் நடந்தது. திருமணம் முடிந்ததும், ரஜினி உடனடியாக சென்னைக்குத் திரும்பி, படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

திருமணத்துக்கு முதல் நாள் இரவு, ரஜினிகாந்த் கார் மூலம் திருப்பதி சென்றார். ரஜினியின் அண்ணனும், ஒரு சில நெருங்கிய உறவினர்கள் மட்டும் உடன் சென்றனர்.

மணமகள் லதா, அவரது பெற்றோர், அக்காள் சுதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வேறொரு காரில் சென்றனர்.

திருப்பதியில், பயணிகள் விடுதியில் (காட்டேஜ்) தங்கினார்கள்.

சுப்ரபாதம் முழங்க தாலி கட்டினார்


அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதியில் சுப்ரபாதம் நிகழ்ச்சி நடந்தது. திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில் அதிகாலையில் பாடப்படும் துதிப்பாடல் "சுப்ரபாதம்.''

அப்போது ரஜினி - லதா திருமணம் நடந்தது. லதா கழுத்தில் ரஜினி தாலி கட்டினார்.

ரஜினி காலில் விழுந்து வணங்கினார், லதா.

பிறகு இரு குடும்பங்களையும் சேர்ந்த பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி, மணமக்கள் ஆசி பெற்றார்கள்.

திருமணம் முடிந்து, சாமி சந்நிதியை விட்டு ரஜினியும், லதாவும் வெளிவந்தபோது, இரண்டொரு பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் எப்படியோ அங்கு வந்து போட்டோ எடுக்க முயன்றனர். `எவ்வளவோ சொல்லியும் அதைக் கேட்காமல் இங்கு வந்துவிட்டார்களே' என்று `டென்ஷன்' ஆனார், ரஜினி.

உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி, வேறு வழியாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

படப்பிடிப்பு

திருப்பதியிலிருந்து அருகில் உள்ள திருச்சானூர் சென்று, பத்மாவதியை தரிசனம் செய்துவிட்டு, ரஜினிகாந்தும் மற்றவர்களும் உடனடியாக சென்னைக்குத் திரும்பினார்கள்.


அன்று காலை 10 மணிக்கு, ஏவி.எம்.ஸ்டூடியோவில் கே.பாலசந்தரின் "நெற்றிக்கண்'' படப்பிடிப்பு நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

7 மாதங்களுக்கு முன், பாலசந்தரின் "தில்லுமுல்லு'' படப்பிடிப்பின்போது அரும்பிய ரஜினி - லதா காதல், அதே பாலசந்தரின் "நெற்றிக்கண்'' படப்பிடிப்பின்போது திருமணத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

திருமண வரவேற்பு

"திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம். ஆனால், திருமண வரவேற்புக்கு எல்லோரும் வாருங்கள். நானே உங்களுக்கு அழைப்பு கொடுப்பேன்'' என்று ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்தார்.

அதைப்போலவே, திருமணத்துக்கு 2 வாரம் கழித்து (மார்ச் 14-ந்தேதி) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.

பிரமுகர்களும், திரை உலகத்தினரும் பெருந்திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

வரவேற்புக்கு, நடிகர் கமலஹாசன் மனைவியுடன் வந்து, மணமக்களை வாழ்த்தினார்.

மற்றும் வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர்கள் விவரம் வருமாறு:-

தொழில் அமைச்சர் திருநாவுக்கரசு, சிறுசேமிப்பு திட்ட துணைத் தலைவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், "முக்தா'' சீனிவாசன், எஸ்.பி.முத்துராமன், துரை, பி.மாதவன், ஆர்.தியாகராஜன், சி.வி.ராஜேந்திரன், ராமண்ணா, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.எஸ்.மணியம், தேவதாஸ்.

ஜெய்சங்கர்

நடிகர்கள் ஜெய்சங்கர், சிவகுமார், பி.எஸ்.வீரப்பா, பிரதாப், சுதாகர், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், அசோகன், நம்பியார்.

நடிகைகள் ராதிகா, சுமித்ரா, சுமலதா, நிர்மலா, ராஜசுலோசனா, அஞ்சலிதேவி, பண்டரிபாய்.

ஏவி.எம்.சரவணன்

பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், குமரன், கோவை செழியன், ஜி.உமாபதி, சி.தண்டபாணி, பஞ்சு அருணாசலம், கலைஞானம், கே.என்.சுப்பு, "கே.ஆர்.ஜி'', `தேவி பிலிம்ஸ்' கவுரிசங்கர், கே.என்.குஞ்சப்பன், ஹரிபோத்தன், ஆர்.எஸ்.சோமநாதன், "என்.வி.ஆர்'' முத்து, ராம்ஜி, `சாருசித்ரா' சீனிவாசன்.

பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.பி.சீனிவாஸ், வாணி ஜெயராம் மற்றும் பலர் வந்திருந்தனர்.

வந்தவர்களை, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ரஜினிகாந்தின் செயலாளர் முரளி ஆகியோர் வரவேற்றனர்.


தந்தையிடம் ஆசி

இதற்கிடையே, மனைவி லதாவுடன் ரஜினி பெங்களூருக்கு சென்று, தன் தந்தையிடம் ஆசி பெற்றார்.

"நீங்கள் சென்னைக்கு வந்து, எங்களுடனேயே தங்கியிருக்கவேண்டும்'' என்று தந்தையிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், தந்தையோ `எல்லோரும் சொந்தக் காலில் நிற்கவேண்டும்' என்று கருதுபவர். தன் வாழ்க்கைக்கு, தனக்குக் கிடைக்கும் `பென்சன்' தொகையே போதும் என்று நினைப்பவர். எனவே சென்னைக்கு வர மறுத்துவிட்டார்.

பிறகு ஒரு முறை, கண் ஆபரேஷன் செய்து கொள்ள சென்னைக்கு வந்து, ரஜினி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார்.

அப்போது ஒரு நிருபர் அவரைச் சந்தித்து, "உங்கள் மருமகள் லதாவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார். "ரொம்ப நல்லப் பொண்ணு. என்னை அன்பாக கவனித்துக் கொண்டாள்'' என்று அவர் பதிலளித்தார்.

லதா தொடர்ந்து படித்தார்

திருமணத்தின்போது லதா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் "பி.ஏ'' இறுதியாண்டு படித்துக்கொண்டு இருந்தார்.

திருமணத்துக்குப் பிறகும் 2 மாதம் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்று படித்து, பரீட்சை எழுதி, "பி.ஏ'' பட்டம் பெற்றார்.

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்?

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்?
திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது?
தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா?
சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!
திருமணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ரஜினிகாந்த் அதிரடியாக பதில் அளித்து, பரபரப்பு உண்டாக்கினார்.

தன் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடைபெற இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-

அழைப்பிதழ் எதற்காக?

"எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களைக்கூட, "வாருங்கள்! என் திருமண கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஆசீர்வதியுங்கள்'' என்று அழைக்கவில்லை.

இதற்குக் காரணம் என்ன? அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது எதற்கு? என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.

என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற்று இருக்கிறேன்.

பஸ் கண்டக்டர்கள்

நான் பெங்களூரில் கண்டக்டராகப் பணியாற்றினேனே! அப்போது என்னுடன் பழகி, என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்திருக்கிறேன்.

தெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. தெய்வம் என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும்.

வெறும் சடங்கு

வெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில் கட்டப்போகிறேன்.

தாலி கட்டுவது என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு பயந்து, ஒருத்தி கழுத்தில் கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம்.

ஏழைக்கு உணவு

இன்று நான் இருக்கும் நிலையில் 4 ஆயிரம் பேர் என்ன, 4 லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை சிறப்பாக செய்ய முடியும்.

ஆனால், கோடீசுவரன் என்றாலும், திருமண விழாவுக்கு பணத்தை விரயம் செய்வதை நான் வெறுக்கிறேன்.

பசி அறியாதவர்கள் என் திருமணத்துக்கு வந்து விருந்துண்டு போவதைவிட, பசித்தவர்களுக்கு சோறு போட நினைக்கிறேன். எனவே, சென்னையில் உள்ள சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.''

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

தேன் நிலவு

"தேன் நிலவுக்கு எங்கே போகப்போகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

"தேன் நிலவாவது, சர்க்கரை நிலவாவது? `விஸ்கி' அடித்தால், தினமும் தேன் நிலவுதான்! கள்ளம், கபடம் இல்லாமல், ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் ஒவ்வொரு நாளும் தேன் நிலவு நாட்களே!

எனினும் இனி நான் `டிரிங்க்' செய்வதை குறைத்துக் கொண்டு விடுவேன். உடல் நலமே முக்கியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும்! இதை கவனிக்கும் பொறுப்பு, இனி என்னை விட என் லதாவுக்கு அதிகம் உண்டு.''

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.


போட்டோ

"செய்தி சேகரிப்பதற்காக திருமணத்துக்கு நிருபர்கள், புகைப்படக்காரர்கள் வரலாமா?'' என்று ஒரு நிருபர் கேட்டார்.

அப்போது, லதாவுடன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை நிருபர்களிடம் ரஜினி கொடுத்தார்.

"திருமணத்துக்குப் பிறகு இந்தப் படத்தை போட்டுக் கொள்ளுங்கள். வரவேற்பு நிகழ்ச்சியை பின்னர் சென்னையில் நடத்தப் போகிறேன். தேதி முடிவாகவில்லை. முடிவானபிறகு, என்னை ஆளாக்கிய கலை உலக, பத்திரிகை உலக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அழைப்பேன். திருப்பதி கோவிலில் மாலை மாற்றி தாலி கட்ட விசேஷ அனுமதி பெற்று இருக்கிறேன். அங்கே பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் வந்து கூட்டம் கூடினால் பிரச்சினை ஏற்படும். எனவே, திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம்'' என்றார், ரஜினி.

"வந்தா...?'' என்று ஒரு நிருபர் கேட்க, ரஜினி `டென்ஷன்' ஆகி, "உதைப்பேன்'' என்றார்.

இந்த பதில், நிருபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

"ரஜினி! இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீர்கள். இதை அப்படியே பிரசுரித்தால் நன்றாக இருக்குமா?'' என்று, மூத்த நிருபர் ஒருவர் கூறினார்.

அமைதி அடைந்த ரஜினி, "நீங்கள் நேருக்கு நேராக இப்படி கூறியதைப் பாராட்டுகிறேன். அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன்... சாரி! ஆனாலும், திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம். காமிராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கிறதைத் தவிர வேறு வழி தோணாது!'' என்றார், ரஜினி!

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார்
முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு


"லதாவுக்கும் எனக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது'' என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.

1981 பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று ரஜினி அழைத்தார்.

சில நிமிடங்களுக்கெல்லாம் நிருபர்கள் பெருந்திரளாகக் கூடிவிட்டனர்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தினத்தந்திக்கு புகழாரம்

"7 மாதங்களுக்கு முன்பே, ரஜினிகாந்த் - லதா திருமணம் என்ற செய்தியை வெளியிட்ட ஒரே பத்திரிகை "தினத்தந்தி''தான்.

ரகசியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்த இந்தச் செய்தியை, "தினத்தந்தி'' வெளியிட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

அந்தச் செய்தி "தினத்தந்தி''யில் வெளிவந்ததும், லட்சக்கணக்கான எனது ரசிகர்களிடம் இருந்து பல கடிதங்கள் வந்தன. பட அதிபர்களும், நடிகர்களும் `போன்' செய்து, "இது உண்மையா என்று கேட்டார்கள். சற்று பொறுத்திருக்கும்படி கூறினேன்.

அந்தச் செய்தி இன்று உண்மையாகி, எல்லோரும் பாராட்டும் விதமாக அமைந்தது பற்றி பெருமைப்படுகிறேன்.''

இவ்வாறு கூறிய ரஜினிகாந்த், அங்கிருந்த தினத்தந்தி நிருபருடன் கை குலுக்கினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:-

"லதாவுடன் எனது காதல் கனிந்து, கடவுள் அருளால் திருமணம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது பற்றி, என் அன்பு ரசிகர்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டை சுமந்து, `மில்லி' அடித்து, வாழ்க்கையின் மேடு - பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

லதா சந்திப்பு

என் வாழ்க்கையில் பெரும் திருப்பம் நìகழ்ந்தது, பிரபல நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில்தான்.

7 மாதங்களுக்கு முன் அங்கு, டைரக்டர் பாலசந்தர் சாரின் "தில்லு முல்லு'' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

பகல் ஒரு மணி இருக்கும். எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில், என் முன்னால் வந்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லதா.

"மிஸ்டர் ரஜினி! நான் கல்லூரி மாணவி. எங்கள் கல்லூரியின் சிறப்பு இதழுக்கு, உங்களை பேட்டி காண வந்திருக்கிறேன். சம்மதமா?'' என்று கேட்டார். நான் சம்மதித்தேன்.

பேட்டி தொடர்ந்தது. சுவையான, அறிவுபூர்வமான கேள்விகள் பலவற்றை லதா கேட்க கேட்க, நானும் என் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

லதா கேட்ட கேள்வி

லதா திடீரென்று "மிஸ்டர் ரஜினிகாந்த்! உங்கள் திருமணம் எப்போது?'' என்று கேட்டார்.

"குடும்பப் பாங்கான பெண் எப்போது கிடைக்கிறாளோ, அப்போதுதான் திருமணம்'' என்று பதிலளித்தேன், லதா மீது கண்களைப் பதித்தபடி.

"இப்படிச் சொன்னால் எப்படி! விளக்கமாகச் சொல்லுங்கள்!'' என்றார், லதா.

"உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்'' என்றேன்.


நாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது.

என் வாழ்க்கையில் ஒளிவு - மறைவு இல்லை. உண்மை பேசி வாழ விரும்புகிறேன். என் மனமார, எவருக்கும் துரோகம் செய்யமாட்டேன்.

அதனால்தான் மனம் திறந்து, "என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?'' என்று லதாவிடம் கேட்டேன். தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசினேன்.

சம்மதம்

லதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் மகேந்திரன் பேசினார். அவர்களின் சம்மதம் கிடைத்தது.

அதன் பிறகு நானும் லதா வீட்டுக்கு சென்று அவர் பெற்றோர்களிடம் பேசினேன். `திருமணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் நானே செய்கிறேன். அதுவரை வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

அண்ணனும் சம்மதித்தார்

நான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

`அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத பெண்ணா உனக்கு மதராசில் கிடைக்கப்போகுது?'' என்று கேட்டார்.

`நான் நல்லா இருக்கணும்னு நீங்க விரும்பினா, லதாவை மணந்து கொள்ள எனக்கு அனுமதி கொடுங்க' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பிறகு என் அண்ணன், சென்னைக்கு வந்தார். லதாவைப் பார்த்துவிட்டு, சம்மதம் தெரிவித்தார்.

லதா மட்டும், "உங்களை மணந்து கொள்ளமாட்டேன்'' என்று கூறியிருந்தால், என் மனம் தாங்கியிருக்காது. ஏனென்றால் ஒரு பொருளின் மீது ஆசை கொண்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவன் நான். சம்யுக்தையை பிருதிவிராஜன் தூக்கிச்சென்றது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.

திருமணத்துக்காக 7 மாதம் காத்திருந்தேன். அதற்குக் காரணம் உண்டு. எனது மனைவியின் குணநலன்கள் எப்படி? என் குணத்தையும், மனதையும் அறிந்து நடந்து கொள்வாளா? அவளது நடை, உடை, பாவனை எப்படி என்பதை எல்லாம் அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்குத்தான் 7 மாதம் பிடித்தது.

பாடலாம்; நடிக்கலாம்

என் மனைவி லதாவுக்கு சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவாள். அவள் விரும்பினால் சினிமாவில் பின்னணி பாடலாம். நடிக்க விரும்பினால் கூட நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன்.

என்னோடு ஜோடியாக நடிக்க விரும்பினால்கூட, நான் நடிக்கத் தயார்!

பெண்கள் என்பவர்கள், வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ, பூச்சியோ அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் தேவை. அந்த சுதந்திரத்தை நான் முழுமையாகத் தருவேன்.''

இவ்வாறு ரஜினி கூறினார்.

பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது!
பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்
ரஜினிகாந்தின் மனைவி லதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது (1980) ரஜினியை பேட்டி காண வந்தார். அவரிடம் மனதைப் பறிகொடுத்த ரஜினி, `உன்னைப்போல் பெண் கிடைத்தால், திருமணம் செய்து கொள்வேன்' என்றார்.

ரஜினி, புகழின் சிகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம்.

அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவருடைய ஸ்டைலில் மனதைப் பறிகொடுத்த பெண்கள் - குறிப்பாக கல்லூரி மாணவிகள், அவருக்கு காதல் கடிதங்கள் எழுதுவார்கள். தினம் தினம் இப்படி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவியும்.

நடிகைகள்

ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், ரஜினியை மணக்க விரும்பினர்.


ஆனால், ரஜினியின் மனதில் காதல் மலரவில்லை. அவர் மனதை எந்தப் பெண்ணும் கவரவில்லை.

ரஜினி 30-வது வயதில் அடியெடுத்து வைத்தபோது, மன்மதனின் மலர்க்கணை அவர் மீது பாய்ந்தது!

1980-ம் ஆண்டு மத்தியில், கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா நிறுவனத்தின் "தில்லுமுல்லு'' படம் உருவாகிக்கொண்டிருந்தது.

பேட்டி காண வந்தார்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் நடந்து கொண்டிருந்தபோது, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு வந்தனர்.

அவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினார். பேட்டிக்கு ரஜினி சம்மதித்தார்.

லதா தமிழிலும், ஆங்கிலத்திலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். அவற்றுக்கெல்லாம் சளைக்காமல் தன் பாணியில் பதில் சொன்னார் ரஜினி.

லதாவின் அழகும், புத்திசாலித்தனமும் ரஜினியைக் கவர்ந்தன. அந்த நிமிடமே ரஜினியின் இதயத்தில் லதா குடியேறிவிட்டார்.

"உங்கள் திருமணம் எப்போது?'' என்று லதா கேட்க, "குடும்பப் பாங்கான பெண் கிடைக்கும்போது என் திருமணம் நடைபெறும்'' என்று ரஜினி பதில் அளித்தார்.

"விளக்கமாக சொல்லுங்கள்'' என்று லதா கேட்க, "உங்களை மாதிரி பெண் கிடைத்தால், நான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று ரஜினி பதிலளித்தார். அதாவது, தன் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.


ஒய்.ஜி.மகேந்திரன்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கைதான் லதா.

மகேந்திரனும், ரஜினியும் நண்பர்கள். எனவே, லதாவை பார்த்ததற்கு மறுநாள், மகேந்திரனிடம் "நான் லதாவை மணந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று ரஜினி கூறினார்.

ரஜினி யாரைக் குறிப்பிடுகிறார் என்பது, மகேந்திரனுக்கு சட்டென்று புரியவில்லை. எம்.ஜி.ஆருடன் படங்களில் நடித்து வரும் லதாவைக் குறிப்பிடுகிறாரோ என்று நினைத்தார்.

"என்னப்பா! லதா, உனக்கு சீனியர் நடிகை. எம்.ஜி.ஆரோடு எல்லாம் நடித்தவர். அவரையா நீ காதலிக்கிறாய்?'' என்று கேட்டார்.

"நான் கூறுவது நடிகை லதாவை அல்ல. உன் மைத்துனி லதாவைத்தான் கூறுகிறேன்'' என்றார், ரஜினி.

ஒரு நிமிடம் திகைத்து நின்ற மகேந்திரன், "சரி. இதுபற்றி என் குடும்பத்தாருடன் பேசுகிறேன். நல்லது நடக்கும்'' என்றார்.

லதாவை ரஜினி மணக்க விரும்புவதை, தன் மனைவியிடமும், குடும்பத்து பெரியவர்களிடமும் மகேந்திரன் தெரிவித்தார். எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. லதாவும் சம்மதம் தெரிவித்தார்.

ஆனாலும், இதை ரகசியமாக வைத்திருந்தார்கள்.


"தினத்தந்தி'' செய்தி

இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தியை "தினத்தந்தி'' வெளியிட்டது. மணமகள் லதா என்பதையும் செய்தியில் குறிப்பிட்டு இருந்தது.

இச்செய்தி, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

"இது உண்மையா?'' என்று கேட்டு ரஜினிக்கு ஏராளமான போன்கள் வந்தன. கடிதங்கள் குவிந்தன.

திரை உலகில் இதுபற்றித்தான் பேச்சு.

ரஜினி எதுவும் பேசாமல் மவுனம் காத்தார்.

(திருமணத்தை உறுதி செய்தார் - திங்கட்கிழமை)

ரஜினி நடித்த திரைப்படங்கள்

படம் வெளியான தேதி டைரக்டர்

1 அபூர்வ ராகங்கள் 18-08-1975 கே.பாலசந்தர்

2 சுதா சங்கமா (கன்னடம்) 23-10-1976 எஸ்.ஆர்.புட்டண்ணா

கனகல்

3 அந்துலேனி கதா (தெலுங்கு) 27-02-1976 கே.பாலசந்தர்

4 மூன்று முடிச்சு 22-10-1976 கே.பாலசந்தர்

5 பாலுஜேனு (கன்னடம்) 10-12-1976 கே.ஆர்.பாலன்

கே.நாகபூஷணம்

6 அவர்கள் 25-02-1977 கே.பாலசந்தர்

7 கவிக்குயில் 29-07-1977 தேவராஜ்

- மோகன்

8 ரகுபதி ராகவ ராஜாராம் 12-08-1977 துரை

9 சில சும்மா செப்பிந்தி 13-08-1977 யோங்கி சர்மா

(தெலுங்கு)

10 புவனா ஒரு கேள்விக்குறி 02-09-1977 எஸ்.பி.முத்துராமன்

11 ஒந்து பிரேமதே கதே 02-09-1977 ஜாய் சைமன்

(கன்னடம்)

12 16 வயதினிலே 15-09-1977 பாரதிராஜா

13 சகோதர சவால் (கன்னடம்) 16-09-1977 கே.ஆர்.தாஸ்

14 ஆடுபுலி ஆட்டம் 30-09-1977 எஸ்.பி.முத்துராமன்

15 குங்கும ரக்ஷே (கன்னடம்) 14-10-1977 எஸ்.கே.ஏ.சாரி

16 காயத்ரி 17-10-1977 பட்டாபிராமன்

17 ஆறு புஷ்பங்கள் 10-11-1977 கே.எம்.பாலகிருஷ்ணன்

18 தொலிரேயி கடிசிந்தி 17-11-1977 ராமிரெட்டி

(தெலுங்கு)

19 ஆம்மே கதா (தெலுங்கு) 18-11-1977

ராகவேந்திர ராவ்

20 கலாட்டா சம்சாரா (கன்னடம்) 02-12-1977 சி.வி.ராஜேந்திரன்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை''

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை''
கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினிகாந்த் நடித்த முக்கிய படங்களில் ஒன்று "முரட்டுக்காளை.'' இதில் அவர் கதாநாயகனாகவும், ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்தனர்.

பட உலக நிலவரம் சரி இல்லாமல் இருந்ததால், ஏவி.எம். நிறுவனம் சில காலம் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 1980-ல் அவர்கள் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்தனர். கதாநாயகனாக நடிக்க ரஜினிகாந்தை ஒப்பந்தம் செய்தனர்.

இதற்கான கதை-வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

வில்லன் ஜெய்சங்கர்

ஒரு கிராமத்தில், பண்ணையாருக்கும், ஏழை விவசாயிக்கும் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. கிராமியக் கதையாக இருந்தாலும், பொழுதுபோக்கு அம்சங்களை நிறைய சேர்த்து படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்க ஏவி.எம். முடிவு செய்தது.

படத்தில் ஒரு புதுமையாக, ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைக்க தீர்மானிக்கப்பட்டது. அதுவரை ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்து, தமிழ்ப்பட உலகின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக ஜெய்சங்கர் திகழ்ந்து கொண்டிருந்தார்.

வில்லன் வேடத்தில் நடிக்க அவர் முதலில் தயங்கினார். எனினும், அவர் வேடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வலுவானதாகவும் இருந்ததால் நடிக்க சம்மதித்தார்.

காளைச்சண்டை

இதில் விவசாயி காளையனாக ரஜினியும், பண்ணையார் மகனாக ஜெய்சங்கரும் நடித்தார்கள்.

பண்ணையாரின் முரட்டுக்காளையை காளையன் அடக்குவான். அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதாக பண்ணையார் அறிவிப்பார். ஆனால், காளையன் மறுத்து விடுவான்.

இந்த மோதல் காரணமாக அடுக்கடுக்காக நடைபெறும் சம்பவங்களால், படம் விறுவிறுப்பாக அமைந்தது.


படத்தின் உச்சகட்டமாக, ஓடுமë ரெயில் மீது ரஜினிக்கும், ஜெய்சங்கருக்கும் நடக்கும் சண்டை மயிர் கூச்செரியும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. பட அதிபர் ஏவி.எம்.சரவணன் உள்பட பலர் கேட்டுக்கொண்டும், ரஜினி `டூப்' போட்டுக்கொள்ள மறுத்து, சண்டைக் காட்சிகளில் அவரே துணிகரமாக நடித்தார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரதி நடித்தார். மற்றும் சுமலதா, ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன் ஆகியோரும் நடித்தனர்.

கதை, நடிப்பு, இசை அனைத்தும் சிறப்பாக அமைந்தன.

20-12-1980-ல் வெளிவந்த இந்தப்படம், 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது.

சரவணன் அனுபவம்

ரஜினி பற்றியும், "முரட்டுக்காளை'' படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றியும் பட அதிபர் ஏவி.எம்.சரவணன் கூறியதாவது:-

"சுமார் 25 வருடங்களுக்கு மேலாக எனக்கு ரஜினி பழக்கம். அவர் எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுபவர். "நான் உண்மையே பேசி பழகிவிட்டேன். இந்தப் பணம், புகழ், பெயர் வந்திட்டா, பொய் பேச வேண்டிய நிலைமையும் வந்திடும். சாப்பாட்டுக்கே வழியில்லாது கஷ்டப்பட்ட காலத்திலேயே உண்மை பேசிவிட்டு, வசதியான வாழ்க்கை அமைந்தபின் இப்போது பொய் பேச மனதுக்குப் பிடிக்கவில்லை. இனிமே வாழப்போறதுகொஞ்ச நாள், அதுவரைக்கும் பொய் பேசாமலேயே இருந்து விடலாமேன்னு தோன்றுகிறது'' என்று என்னிடம் அவர் கூறியதுண்டு.

அதுமட்டுமல்ல. வழக்கமாக சினிமா உலகில் எல்லாருமே கால்ஷீட் விஷயங்களைக் கவனித்துக்கொள்ள ஓர் உதவியாளரை வைத்துக் கொண்டிருப்பார்கள். விருப்பம் இல்லாத விஷயங்களைத் தட்டிக்கழிக்கவும், , தவறு நேர்ந்து விட்டால் பழியைப் போட்டுவிட்டு நழுவவும், அந்த உதவியாளரைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.


ஆனால், ரஜினி இந்த விஷயத்தில் நேர் எதிர். மற்ற விஷயங்களைக் கவனித்துக்கொள்ள உதவியாளர்கள் இருந்தாலும், கால்ஷீட் விஷயத்தைத் தானே நேரடியாக கவனித்துக்கொள்வார். ஒரு தயாரிப்பாளருக்குத் தேதிகளை முடிவு செய்துவிட்டால், தானே அதைக் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து விடுவார். எக்காரணம் கொண்டும் கொடுத்த தேதியை மாற்றமாட்டார். வேறு யாராவது அந்த தேதிகளில் அட்ஜெஸ்ட் செய்து ஓரிரு நாட்கள் கால்ஷீட் கேட்டால் கூட `சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், டைரக்டரிடம் நீங்களே நேரடியாக பேசிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிடுவாரே தவிர, அவர் தலையிட்டு தர்மசங்கடம் ஏற்படுத்த மாட்டார்.

ஜெய்சங்கருக்கு மரியாதை

அடுத்தவர் மனம் நோகும்படி எதுவும் செய்து விடக்கூடாது என்பது ரஜினியின் பாலிசி. எங்களது `முரட்டுக்காளை' படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் படத்தின் ஹீரோவான ரஜினி, `நூற்றைம்பது படங்களில் ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் இதில் வில்லன். அவர் வில்லன் என்பதால், படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்துவிடாதீர்கள்' என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார்.''

இவ்வாறு சரவணன் கூறினார்.

ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம்
ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஜினிகாந்த் நடித்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று "ஜானி.'' மகேந்திரன் இயக்கத்தில் உருவான படம்.

புதுமையான இரட்டை வேடம்

இதில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஒரு ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. இன்னொரு ரஜினிக்கு ஜோடி தீபா.

வழக்கமாக, இரட்டை வேடப்படம் என்றால் இருவரும் ஒரே தோற்றம் கொண்டவர்களாகவோ, இரட்டையர்களாகவோ இருப்பார்கள்.

இதில் ஒரு ரஜினி ஹீரோ; மற்றொரு ரஜினி பார்பர்! இவர் மகா கஞ்சன். இவருடைய செய்கைகள் வித்தியாசமாகவும், வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாகவும் இருக்கும். கடைசியில் தீபா துரோகம் செய்வதால், கொலை செய்து விடுவார்.


ஹீரோ ரஜினி - ஸ்ரீதேவி காதலை மென்மையாகச் சித்தரித்திருந்தார், மகேந்திரன்.

படத்தின் உச்சகட்டத்தில், ஸ்ரீதேவி உருக்கமாகப்பாட, எதிரிகளை வீழ்த்திவிட்டு ரஜினி ஓடிவருவார். அந்தக் காட்சி மெய்சிலிர்க்கச் செய்யும்.

கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதிய பாடல்களுக்கு, இளையராஜா அற்புதமாக இசை அமைத்திருந்தார்.

அசோக்குமாரின் படப்பிடிப்பு பிரமாதம்.

1980 சுதந்திர தினத்தன்று வெளிவந்த "ஜானி'', நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

மகேந்திரன் அனுபவம்

"ஜானி'' படமானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி டைரக்டர் மகேந்திரன் கூறியிருப்பதாவது:-

"ஜானிக்கு முன்பு வரை, ஸ்ரீதேவியின் அழகை மட்டும் படங்களில் பார்க்க முடிந்தது. ஜானியில்தான் முதன் முறையாக அவருடைய நடிப்பாற்றலை எல்லோரும் உணர முடிந்தது.

ஜானியில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். என்ன அழகாய் வித்தியாசப்படுத்தி நடித்தார்! இருந்தாலும், `ஸ்ரீதேவியின் நடிப்புக்கு ஈடு கொடுத்து என்னால் அந்தக் காட்சியில் நடிக்க இயலவில்லை' என்று அவ்வப்போது கூறுவார். அதுதான் ரஜினிகாந்த்!

நூறு குடைகள்

`ஜானி' கடைசி நாள் ஷூட்டிங். ஒரு மாதம் முன்னரே சொல்லியிருந்தபடி, மழை அடிக்கும் வேளையில் மேடையில் ஸ்ரீதேவி பாடும் பாடல் காட்சிக்கு நூறு குடைகளும், இருநூறு ஆட்களும் தேவை என்று தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தேன். ஜானி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சென்னையில் பகலில் ஒரு பகுதியில் எடுத்துவிட்டு உச்சகட்ட பாடல் காட்சி எடுக்க மாலையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு வந்தால், குடையும் இல்லை, ஆளும் இல்லை! மழைத் தண்ணீருக்காக வரவழைக்கப்பட்டிருந்த தீயணைப்பு படை வண்டி மட்டுமே நிற்கிறது.


குடையும் ஆளும் கிடைக்காததற்கு தயாரிப்பாளர் ஏதேதோ காரணம் சொல்ல நான் இடிந்துபோய் உட்கார்ந்து விட்டேன். `நான் நினைத்த மாதிரி இந்த கிளைமாக்ஸ் பாடல் காட்சியை எடுக்க முடியாதா?' என்று சோர்வடைந்தேன். ரஜினி என்னிடம் ஓடி வந்தார். என் சோர்வுக்குக் காரணம் கேட்டார். சொன்னேன். தயாரிப்பாளரிடம் ஓடினார்.

"ஒருநாள்தான் உங்கள் கால்ஷீட்டும், ஸ்ரீதேவி கால்ஷீட்டும் இருக்கிறது. இந்த நிலையில், கிடைக்காத குடைகளுக்கும், ஆட்களுக்கும் நான் எங்கே போவது?'' என்றார் தயாரிப்பாளர்.

"ஒரு நாள் இல்லை சார்! இன்னும் ஒரு வாரமோ - பத்து நாளோ, மகேந்திரன் சார் சொல்ற வரைக்கும் இந்தப் பாட்டை முடிக்காம நானோ ஸ்ரீதேவியோ இங்கேயிருந்து போகமாட்டோம். டைரக்டர் நினைக்கிற மாதிரி இந்தப் பாடலை எடுக்கவிடுங்க'' என்றார், ரஜினி தீர்க்கமாக!

"இன்றைக்கு விட்டால் தீயணைப்பு வண்டி இன்னும் ஒரு மாதத்திற்கு கிடைக்காது. நான் என்ன பண்றது?'' என்று திரும்பவும் தயாரிப்பாளர் பல காரணங்களைச் சொல்லவே, "நிலைமையை நான் சமாளிக்கிறேன். இத்துடன் விட்டுவிடுங்கள்'' என்று ரஜினியை சமாதானப்படுத்தினேன்.

அன்று இரவு, விடிய விடிய படப்பிடிப்பு நடத்தி, பாடல் காட்சியை எடுத்து முடித்தேன்.

"ஜானி'' வெளியாகி வெற்றிப்படமானது.

நடிப்பில் மட்டுமல்ல, நட்பிலும் ஆழமானவர் ரஜினி.''

இவ்வாறு மகேந்திரன் கூறியுள்ளார்.

எல்லாம் உன் கைராசி

அடுத்து ரஜினி நடித்து வெளிவந்த படம் "எல்லாம் உன் கைராசி.''

இதற்கு கதை, திரைக்கதை எழுதி டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம்.

ரஜினியுடன் சீமா, சவுகார் ஜானகி, சச்சு, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் ஆகியோர் நடித்தனர்.


இசை இளையராஜா.

9-10-1980ல் வெளிவந்த இந்தப்படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

பொல்லாதவன்

குடும்பக் கதைகளை படமாக்கி வந்த `முக்தா' சீனிவாசன், ரஜினியை வைத்து தயாரித்த படம் "பொல்லாதவன்.''

இதில் ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா ஆகியோர் இணைந்து நடித்தனர்.

மற்றும், சுருளிராஜன், டெல்லிகணேஷ், வி.கோபாலகிருஷ்ணன், பேபி அஞ்சு ஆகியோரும் நடித்தனர். வசனம்: தூயவன்; இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

முரட்டு இளைஞன் வேடத்தில் ரஜினி பிரமாதமாக நடித்து, ரசிகர்களைக் கவர்ந்தார்.

6-11-1980-ல் வெளிவந்த இப்படம் நூறு நாள் ஓடிய வெற்றிப்படம்

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா'

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா'
இரட்டை வேடங்களில் அசத்தினார்

ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் பெரிய வெற்றிப் படம் "பில்லா.'' இதில், இரட்டை வேடங்களில் பிரமாதமாக நடித்தார்.

ரஜினியை முழு ஆக்ஷன் ஹீரோவாக வெளிப்படுத்திய படம் இது.

கதை

சர்வதேச கடத்தல்காரர்களில் ஒருவனான பில்லா (ரஜினி) அடிதடிக்கு அஞ்சாதவன். எத்தனை அசகாய போலீசாக இருந்தாலும் பில்லாவை நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு சாமர்த்தியத்திலும் வல்லவனாக இருக்கிறான் இந்த பில்லா.

சென்னை நகர போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர் (பாலாஜி), பில்லாவை பிடிப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறார்.

இதற்கிடையே சர்வதேச போலீஸ் அதிகாரி (மேஜர் சுந்தர்ராஜன்) சென்னை வருகிறார். சர்வதேச அளவில் பிரபலமான கடத்தல்காரர்கள் அத்தனை பேரும் தங்கள் தொழில் தொடர்பான ஒரு `மீட்டிங்'குக்காக சென்னைக்கு வந்திருப்பதை கூறி, போலீஸ் வட்டாரத்தை உஷார்படுத்துகிறார்.

பில்லாவிடம் விசுவாசமாக இருந்த ஜானி என்ற இளைஞனுக்கு, கடத்தல் வாழ்க்கை அலுத்துப் போகிறது. அவன் பில்லாவுக்கு `டிமிக்கி' கொடுத்துவிட்டு காதலியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சிக்கிறான். இதை மோப்பம் பிடித்து விட்ட பில்லா, அவனது பயணத்தை தடுப்பதுடன் உயிரையும் நிறுத்தி விடுகிறான்.

பழிக்குப்பழி

இதனால் வெகுண்டெழுந்த அவன் காதலி (பிரவீணா) தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் பில்லாவை சந்திக்கிறாள். அவனை தனது வசீகரப் புன்னகையில் மயக்கியபடியே போலீசுக்கும் ரகசிய தகவல் கொடுத்து விடுகிறாள்.

போலீஸ் டி.எஸ்.பி. தலைமையில் ஒரு போலீஸ் பட்டாளமே பில்லா தங்கியிருந்த ஓட்டலை சுற்றி வளைக்கிறது. ஆனால் பில்லா அந்தப் பெண்ணையே தனக்குப் பாதுகாப்பாக பயன்படுத்தி, தப்பித்து விடுகிறான். அதோடு அந்தப் பெண்ணையும் கொன்று விடுகிறான்.

ஜானியின் தங்கை ராதாவுக்கு (ஸ்ரீபிரியா) இந்த தகவல் தெரியவர, அவள் தனக்கு வேண்டிய ஒரு கராத்தே மாஸ்டர் மூலம் `பில்லா'வின் கூட்டத்தில் சேருகிறாள்.

பில்லா அவளை நம்பத் தொடங்கிய நேரத்தில் அவள் கொடுத்த ரகசியத் தகவல் போலீசை எட்டுகிறது. இம்முறை `பில்லா'வால் தப்ப முடியவில்லை. போலீசின் துப்பாக்கி, பில்லாவைத் துளைக்கிறது.

அரைகுறை உயிருடன் ஆற்றில் விழுந்து அப்போதைக்கு தப்பிக்கும் பில்லா, கடைசியில் `டி.எஸ்.பி' அலெக்சாண்டரின் காரில் ஏறிக்கொண்டு, அவரையே மிரட்டி தனது இருப்பிடத்துக்கு கொண்டு விடச்சொல்கிறான். ஆனால் பாதி வழியில் அவன் உயிர் பிரிந்து விடுகிறது.

போலி பில்லா

பில்லா இறந்து போனது டி.எஸ்.பி. அலெக்சாண்டருக்கு மட்டுமே தெரியும். `பில்லா'வை உயிருடன் பிடித்திருந்தால் அவன் மூலம் சர்வதேச அளவிலான கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை திரட்டியிருக்க முடியும். பில்லாவின் கடத்தல் கூட்டத்தையும் ஒட்டுமொத்தமாக பிடித்திருக்க முடியும். இந்த இரண்டுமே நடக்காததால், பில்லாவை ஒரு கல்லறைத் தோட்டத்தில் ரகசியமாய் புதைக்க ஏற்பாடு செய்த டி.எஸ்.பி. `பில்லா' சாயலில் ரோடுகளில் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தி வந்த ராஜப்பா (இன்னொரு ரஜினி) என்ற இளைஞனை `பில்லா' போல தயார் செய்கிறார்.

ராஜப்பா புதிய `பில்லா'வாக எதிரிகள் இருப்பிடத்தில் நுழைகிறான்.

இதற்கிடையே பில்லா மீண்டும் தனது கூட்டத்துடன் இணைந்து கொண்ட தகவல் போலீசை எட்டுகிறது. அவர்கள் பில்லாவை வேட்டையாட நடவடிக்கை எடுக்கிறார்கள்.

`பில்லா'வாக நடிக்கும் ராஜப்பாவின் நிலைதான் பரிதாபம். போலீசிடம் மாட்டினாலும் உயிர் உத்தரவாதமில்லை. கடத்தல் கூட்டம் தெரிந்து கொண்டாலும் பரலோகம் நிச்சயம். அதோடு தனது அண்ணன் ஜானியை கொன்றதற்காக எப்போது கொல்லலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ராதா ஒரு பக்கம்.

இந்த மாதிரியான இக்கட்டான சூழலில் சர்வதேச போலீஸ் அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், கடத்தல்காரர்களின் ஒரிஜினல் தலைவன் என்பது ராஜப்பாவுக்கு தெரியவருகிறது. போலி போலீஸ் அதிகாரி, `ராஜப்பா'வை பில்லாவாக தயார் செய்திருந்த டி.எஸ்.பி.யை `குளோஸ்' பண்ணிவிட்டு, `பில்லா'வாக நடிக்கும் ராஜப்பாவுக்கு குறி வைக்கிறார்.

ராஜப்பா தனது பாடல் குழுவினருடன் அதிரடியாக மோதல் களத்தில் இறங்கி, போலி சர்வதேச போலீஸ் அதிகாரியை உலகுக்கு அடையாளம் காட்டுகிறார்.

இதற்கிடையே ராஜப்பாவை யாரென்று தெரிந்து கொண்ட ராதாவும் உதவுகிறாள்.

சர்வதேச கடத்தல் கூட்டம் ராஜப்பாவால் பிடிபட, போலீஸ் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

ராஜப்பா - ராதா திருமணத்தில் படம் முடிகிறது.

பில்லா, ராஜப்பா என இரண்டு வேடத்தில் ரஜினி நடிப்பில் கலக்கிய படம். பில்லாவாக தனக்கே உரிய ஸ்டைலில் அசத்தினார்; ராஜப்பா என்ற கிராமத்துப் பாடகன் கேரக்டரிலும் நெளிவும் குழைவும் கலந்து ரசிகர்களை கவர்ந்தார்.

போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டராக பாலாஜி சிறப்பாக நடித்தார். படத்தை தயாரித்ததும் இவரே.

அதுவரை காமெடி செய்து கொண்டிருந்த தேங்காய் சீனிவாசனை குணச்சித்திர கேரக்டரில் அறிமுகப்படுத்திய பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.

நடிகர்கள் ஏவி.எம்.ராஜன், அசோகன், கவுரவ வேடத்தில் தோன்றினார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "நாட்டுக்குள்ளே எனக்கொரு ஊருண்டு'', "நினைத்தாலே இனிக்கும் சுகம்'', "மை நேம் இஸ் பில்லா'' போன்ற பாடல்கள் இப்போது கேட்டாலும் திகட்டாத ரகம்.

டைரக்ட் செய்தவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பினால், அதற்குப் பிறகு தனது பெயரை `பில்லா' ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்று மாற்றிக்கொண்டார்.

26-1-1978-ல் வெளியாகி, 260 நாள் ஓடி சாதனை படைத்த இப்படம், வசூலிலும் புரட்சி செய்தது. ரஜினியை நாயகனாக்கி படமெடுத்தால் `நிச்சய லாபம்' என்ற நம்பிக்கைக்கு நிரந்தரமாக அஸ்திவாரமிட்ட பெருமையும் இந்த `பில்லா' படத்துக்கு உண்டு.

பில்லாவுக்குப் பிறகு 4-6-1980-ல் "ராம் ராபர்ட் ரகீம்'' வெளிவந்தது. இந்தியில் வெளியான "அமர் அக்பர் ஆன்டனி'' படத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் இது.


அன்புக்கு நான் அடிமை

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான "அன்புக்கு நான் அடிமை'' 19-7-1980-ல் வெளியாகி சக்கை போடு போட்டது. இதில் ரஜினியுடன் கராத்தே மணியும் இணைந்து நடித்தார்.

ரஜினிக்கு ஜோடியாக ரதி நடித்தார்.

படத்தை சி.தண்டாயுதபாணி தயாரித்தார். ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்''

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்''
"உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''
ரஜினிகாந்த் உடல் நலம் குன்றியிருந்தபோது அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்'' என்று கனிவுடன் கூறினார்.

ரஜினிகாந்த், யானையுடன் நடித்த "அன்னை ஓர் ஆலயம்'' படத்தை டைரக்ட் செய்தவர், ஆர்.தியாகராஜன். (சாண்டோ சின்னப்ப தேவர் மருமகன்)

இந்தப் படத்தை இயக்கியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

"1979-ல் `அன்னை ஓர் ஆலயம்' படத்தை இயக்கினேன். இது அந்த வருடம் தீபாவளிக்கு ரிலீசானது. "தாய்ப்பாசம் என்பது மிருகங்களுக்கும் உண்டு'' என்பதை மையக்கருத்தாக்கி வந்த படம். பெரிய வெற்றி.

இந்தப் படத்தில், ஒரு சிறுத்தையை ரஜினி தோள் மீது தூக்கிச் செல்லும் காட்சி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்தப்படம் தமிழில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, "அம்மா வெருகேனு அம்மா'' என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்தோம். அதிலும் ரஜினி நடித்தார். தெலுங்கும் வெற்றிப்படமே.


எளிமை

சினிமாப்புகழ் எப்போதுமே அவரை பாதித்ததில்லை. திடீர் திடீரென எங்கள் ஆபீசுக்கு வருவார். களைப்பாக இருந்தால், எங்கேயாவது ஒரு ஓரத்தில் கையை தலைக்கு வைத்து படுத்துக்கொள்வார். சாதாரண ஓட்டலில் இடியாப்பம் - பாயா வாங்கி வரச்சொல்லி அதையே சாப்பிடுவார்.

ஒரு படத்தில் நடித்ததுமே, `நட்சத்திர ஓட்டல் டிபன்தான் வேண்டும்' என்று கேட்கிற சினிமா உலகில், எந்த பந்தாவும் இல்லாமல் ரஜினி எளிமையாக இருந்தார்.

"அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் ரஜினி நடித்த நேரத்தில், தூங்காமல் - ஓய்வு எடுக்காமல் உழைத்தார். அவருக்குள் ஒருவித குழப்ப நிலை நீடித்ததை உணர்ந்து கொண்டோம். இதனால் எங்கள் கம்பெனி தயாரிப்பு நிர்வாகி, உதவி இயக்குனர் விஜயசிங்கம், கார் டிரைவர் மூவரையும் எப்போதும் ரஜினியுடன் இருக்கும்படி ஏற்பாடு செய்தோம்.

எம்.ஜி.ஆருக்கு தகவல்

ஆனால், இதையும் தாண்டி அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில், சத்யா ஸ்டூடியோவில் ரஜினி நடிக்க வந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் செயலாளராக இருந்த பத்மநாபனிடம் இதுபற்றி கவலை தெரிவித்தோம்.

எம்.ஜி.ஆர். அப்போது முதல்-அமைச்சராக இருந்தார். ரஜினி பற்றிய தகவல் பத்மநாபன் மூலம் அவருக்குத் தெரிந்தது. எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டூடியோவுக்கு வந்து, ரஜினியை பார்த்துப் பேசினார். "உடம்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத முடியும்'' என்று ரஜினிக்கு அன்புடன் `அட்வைஸ்' செய்துவிட்டுப் போனார்.


லாபமா, நஷ்டமா?

"அன்னை ஓர் ஆலயம்'' கடைசி நாள் படப்பிடிப்பு. பூசணிக்காய் உடைத்த பிறகு, காரில் ஏறப்போன ரஜினி நேராக என்னிடம் வந்தார். என்னை எப்போதும் `மாப்பிள்ளை' என்றுதான் அழைப்பார்.

"என்ன மாப்பிள்ளை! இந்தப்படம் உங்களுக்கு லாபமா? நஷ்டமா?'' என்று கேட்டார். தனது உடல் நலம் காரணமாக, படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப்போனதால், தயாரிப்பு செலவு அதிகமாகியிருக்குமோ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அப்படிக் கேட்டார்.

நான் அவரிடம், "ரஜினிபாய்! உங்களை வைத்து தயாரிக்கும் படத்தால் நஷ்டம் வராது. லாபத்தில் கொஞ்சம் குறைவு. அவ்வளவுதான்!'' என்றேன் சிரித்தபடி.

உடனே, தனது கையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை என் கையில் தந்தார் ரஜினி. "நாளைக்கு இதை படிச்சுப் பாருங்க'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அவர் புறப்பட்டுப் போனதும், ஆவலை அடக்க முடியாமல் அந்தக் கடிதத்தை அப்போதே பிரித்துப் பார்த்தேன். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என்று 3 மாதங்களுக்கான தேதிகளை எங்கள் பட நிறுவனத்துக்கு (படப்பிடிப்பு நடத்திக்கொள்ள) கொடுத்திருப்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தார். அந்த தேதிகளில் ஒரு தெலுங்குப் படத்தையும், ஒரு தமிழ்ப்படத்தையும் எடுத்து முடித்தோம்.''


இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

தனித்து நடிக்க முடிவு

அபூர்வ ராகங்கள், அவர்கள், 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் இணைந்து நடித்த கமலஹாசனும், ரஜினிகாந்தும் இனி தனித்தனியே நடிப்பது என்று முடிவு செய்தனர்.

இருவருடைய வளர்ச்சிக்கும் அதுதான் நல்லது என்று அவர்கள் கருதினர்.

இதுபற்றிய அறிவிப்பை, பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கமலஹாசன் அறிவித்தார். அப்போது ரஜினிகாந்த் உடன் இருந்தார்.

சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்'
சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் ரஜினிகாந்த், யானைகளுடன் நடித்தார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில், ஒரு சிறுத்தையை தோள் மீது போட்டுக்கொண்டு நடப்பார், ரஜினி!

சாண்டோ சின்னப்ப தேவர் மறைவுக்குப்பின், அவர் மகன் சி.தண்டாயுதபாணி "தேவர் பிலிம்ஸ்'' பேனரில் படங்களைத் தயாரித்தார்.

தேவரின் கதை

தேவர் பிலிம்ஸ் படங்களுக்கான கதைகளை பெரும்பாலும் தேவரே உருவாக்குவது வழக்கம். யானைகளை வைத்து அவர் எழுதி வைத்திருந்த கதை "அன்னை ஓர் ஆலயம்.'' அதை தண்டாயுதபாணி, படமாக எடுத்தார்.

வசனத்தை தூயவன் எழுதினார். படத்தை, தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.

இதில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். ரஜினியின் அம்மாவாக அஞ்சலிதேவி நடித்தார். மற்றும் ஜெயமாலினி, மோகன்பாபு, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சுருளிராஜன் ஆகியோர் நடித்தனர்.


பாடல்களை வாலி எழுத, இளையராஜா இசை அமைத்தார்.

கதை

மிருகங்களுக்கும் தாய்ப்பாசம் உண்டு என்பதை சித்தரிக்கும் கதை. இதில், வேட்டைக்காரராக ரஜினி நடித்திருந்தார். காட்டுக்குள் தைரியமாகச் சென்று, மிருகங்களைப் பிடித்து அவற்றை சர்க்கஸ் கம்பெனிகளுக்கு விற்பது அவரது வேலை.

தாயிடம் இருந்து குட்டி மிருகங்களை தந்திரமாகப் பிடித்து விற்பனை செய்து விடுவார்.

இப்படி தாய் மிருகங்களிடம் இருந்து குட்டிகளைப் பிரிப்பது அவர் அம்மா அஞ்சலிதேவிக்குப் பிடிக்கவில்லை. அவர் ரஜினியிடம், "மிருகங்களுக்கு தாய்ப்பாசம் அதிகம். அதனால், தாயிடம் இருந்து குட்டிகளைப் பிரிக்காதே'' என்று கேட்டுக்கொள்வார்.

ரஜினியோ, "மிருகங்களுக்காவது, தாய்ப்பாசமாவது!'' என்று சிரித்துக்கொண்டு போய்விடுவார்.

இந்நிலையில், ஒரு தாய் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரித்து, சர்க்கஸ் கம்பெனிக்கு விற்று விடுவார். விஷயம் தெரிந்ததும், "உன் தாயை பிரியும்போதுதான் அந்த வேதனை உனக்குத் தெரியும்'' என்று ரஜினியிடம் கூறுவார், அஞ்சலிதேவி.

சில நாட்களிலேயே அப்படியொரு விபரீதம் நடக்கிறது. காட்டில் மகனைத் தேடிவந்த தாயாரை, ஏற்கனவே குட்டியை பிரிந்த சோகத்தில் இருந்த தாய் யானை துரத்துகிறது. தாயின் கூக்குரல் கேட்டு ரஜினி தாயைக் காப்பாற்ற ஓடிவருவார். வரும் வழியில் மிருகங்களை பிடிக்க வைத்திருந்த `பொறி'யில் மாட்டிக்கொள்வார்.

அவரது கண்ணெதிரிலேயே அஞ்சலிதேவியை தன் துதிக்கையால் தூக்கி வீசியெறிகிறது, யானை. மரணத் தறுவாயில் அஞ்சலிதேவி, "மகனே! இந்த தாய் யானையிடம் அதன் குட்டியை கொண்டு வந்து சேர்த்துவிடு!'' என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார்.

தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய குட்டி யானையை விற்ற சர்க்கஸ் கம்பெனிக்கு ஓடுவார், ரஜினி. ஆனால் அதற்குள் அந்த குட்டி யானை வேறொரு சர்க்கஸ் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் குட்டி யானை இருந்த கம்பெனியை தேடிப்போய் அதை மீட்கிறார்,ரஜினி.


ஆனால் குட்டி யானை, அவரைப் பார்த்து பயந்து ஓட்டம் பிடிக்கிறது. ரஜினியும் விடாமல் அதைப் பிடித்து, அதற்கு தான் எதிரி எல்ல என்பதை நம்ப வைக்கிறார். கடைசியில், அதை காட்டுக்கு அழைத்துச்சென்று தாய் யானையுடன் சேர்த்து வைக்கிறார். முடிவில் தாய் யானை, குட்டி யானை இரண்டும், துதிக்கையை தூக்கி ரஜினியை ஆசீர்வதித்து விட்டுப் போகும். அப்போது தன் தாயே தன்னை ஆசீர்வதிப்பதாக எண்ணி மகிழ்வார், ரஜினி.

சினிமா தியேட்டரில் யானை

இந்தப் படத்தில் ரஜினி, யானைக்குட்டி சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளும் கலகலப்பானவை.

ரஜினியிடம் இருந்து தப்பி ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழையும் யானைக்குட்டி, அங்கே திரையில் `நல்ல நேரம்' படத்தில் யானைகள் வருகிற காட்சியை பார்த்து திரையை கிழிப்பது, பிறகு ரஜினி வந்து குட்டி யானையை அடக்குவது போன்ற காட்சிகளை குழந்தைகள் குதூகலமாக ரசித்தார்கள்.

இளையராஜா இசையில் "அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே'', "நதியோரம்'', "அம்மா நீ சுமந்த பிள்ளை'' போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

சிறுத்தை

இந்தப் படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார், ரஜினி.

இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே `டூப்' போட்டுக்கொள்ளுங்கள்'' என்று ரஜினியிடம், மிருகங்களை பழக்கும் `மாஸ்டர்' கூறினார்.

ஆனால் ரஜினியோ, `டூப்' போடவில்லை. அவராகவே சர்வசாதாரணமாக சிறுத்தையை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு நடந்து

போனார்.சாதாரணமாக, இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு எடை கொண்டது அந்த சிறுத்தை. அதை, தன்னந்தனி ஆளாக அதுவும் அநாயாசமாக ரஜினி தூக்கியதைப் பார்த்து, படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள்.

19-10-1979 அன்று "அன்னை ஓர் ஆலயம்'' வெளியாயிற்று. ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திரையரங்குகள் திணறின. படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது.

இதே படம் "மா'' என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.