Saturday, 5 July 2014

சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு
சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்
கே.ஆர்.விஜயா சொந்தமாகத் தயாரித்த "நான் வாழவைப்பேன்'' படத்தில், சிவாஜிகணேசனுடன் ரஜினி இணைந்து நடித்தார். மிகப் பிரமாதமாக நடித்து, சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்.

"நினைத்தாலே இனிக்கும்'' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த படம் "தர்மயுத்தம்.'' இதை, சாருசித்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டி.ஆர்.சீனிவாசன் தயாரித்தார்.

ஸ்ரீதேவி

இதில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. மற்றும் லட்சுமிஸ்ரீ, சச்சு, புஷ்பலதா, தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்தனர்.

கதை-வசனத்தை பீட்டர் செல்வகுமார் எழுத, கண்ணதாசன், எம்.ஜி.வல்லபன், ஹரிராம் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசை அமைத்தவர்: இளையராஜா.


படத்தை ஆர்.சி.சக்தி டைரக்ட் செய்தார்.

தங்கை மீது பாசம் உள்ள தொழில் அதிபராக ரஜினி நடித்தார். சற்றே மாறுபட்ட வேடம். மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்களைக்

கவர்ந்தார்.இந்தப் படத்தில், ரஜினிக்காக மலேசிய வாசுதேவன் பாடிய, "ஒரு தங்க ரதத்தில்...'' என்று தொடங்கும் பாடல், பெரிய `ஹிட்' ஆயிற்று.

"தர்மயுத்தம்'', அதே பெயரில் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது.

நான் வாழவைப்பேன்

ரஜினிகாந்தின் திரை உலகப் பயணத்தில், ஒரு மைல் கல் "நான் வாழவைப்பேன்.'' இதில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.

நடிகை கே.ஆர்.விஜயாவும், அவர் கணவர் வேலாயுத நாயரும் தயாரித்த படம்.

அமிதாப்பச்சனும், வில்லன் பிரானும் நடித்த "மஜ்பூர்'' என்ற இந்திப் படத்தை தழுவி தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயா, புஷ்பமாலா, ஏ.சகுந்தலா, ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், வி.கே.ராமசாமி, செந்தாமரை ஆகியோரும் நடித்தனர்.

திரைக்கதை - வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். யோகானந்த் டைரக்ட் செய்தார்.

வியக்க வைத்த நடிப்பு

படத்தில், இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினிகாந்த் வருவார். வில்லன் போன்ற கேரக்டர் என்றாலும், சிவாஜியைக் காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்யும் குணச்சித்திர வேடம்.

இப்படத்தில், ரஜினியின் நடிப்பு புதிய பரிமாணத்துடன், சிகரத்தைத் தொட்டது. தன்னுடைய குருவான சிவாஜிகணேசன் முன்னிலையிலேயே அபாரமாக நடித்து, அவருடைய பாராட்டைப் பெற்றார்.

சிவாஜி சொன்னது என்ன?

இந்தப்படம் தயாரானபோது தன் வேடம் பற்றியும், ரஜினி வேடம் பற்றியும் சிவாஜி என்ன சொன்னார்? ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு, அவர் கூறிய கருத்து என்ன?

- இதுபற்றி, அப்படத்தின் வசனகர்த்தாவும், சிவாஜியின் நெருங்கிய நண்பருமான ஆரூர்தாஸ் கூறியதாவது:-


இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் சிவாஜிகணேசனும், `பிரான்' நடித்த பாத்திரத்தில் ரஜினிகாந்தும் நடிக்க ஏற்பாடாயிற்று.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அந்த இந்திப்படத்தை சிவாஜியும் நானும் பார்த்தோம். பார்த்து முடித்ததும் சிவாஜி என்னிடம் இப்படிக் கூறினார்.

"ஆரூரான்! `ஹீரோ' அமிதாப் நடிச்சிருக்கிறது வெறும் "டம்மி'' ரோல். அதில் நடிப்புக்கு `ஸ்கோப்' இல்லே. பிரான் ரோல்தான் "ஆக்டிங் ரோல்'' அதுதான் ஆடியன்ஸ் மனசுல நிக்கும். கெஸ்ட் ரோலா அதைச் செய்யலாமான்னு நினைக்கிறேன்.''

இவ்வாறு சிவாஜி கூறியதும் நான் சொன்னேன்:

"உங்களையும் ரஜினியையும் வச்சிக்கிட்டு, ரஜினி ஹீரோ, நீங்க `சைடு ரோல்'னு சொன்னா சரியா இருக்குமா? தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வாரா என்பதையும் யோசிங்க.''

"ஆமா. உண்மைதான். செய்தா, விஜயா - வேலாயுதம் இரண்டு பேருக்காக இந்தப் படத்துல நான் நடிக்கணும். இல்லேன்னா

விட்டுடணும்.''"நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்.''

"அதுமட்டுமில்லை. அந்தப் பையன் (ரஜினி) நல்லா வளர்ந்துகிட்டு வர்றான். அந்த வளர்ச்சிக்கு இந்தப் படமும் அவனுக்குப் பயன்படட்டுமே. நான்தான் எல்லாம் செய்திட்டேனே. இப்படித்தான் அப்போ ஜெமினிகணேசனும், நானும் சேர்ந்து நடிச்ச "பெண்ணின் பெருமை'' படத்துல நான் விட்டுக்கொடுத்து வில்லன் பாத்திரத்தை எடுத்துக்கிட்டேன். ஓகே! செய்வோம்'' என்றார், சிவாஜி.


பாராட்டு

"நான் வாழ வைப்பேன்'' படப்பிடிப்பெல்லாம் முடிந்து, முதல் பிரதியை சிவாஜி பார்த்தார். நானும் அவருடன் இருந்தேன். உச்சக்கட்ட காட்சியில் ரஜினியின் நடிப்பைப் பார்த்துக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் சிவாஜி சொன்னார்:

"பாத்தியா! அன்றைக்கு நான் என்ன சொன்னேன்? கடைசியில் அந்த ரோல்தான் நிக்கும்னு சொன்னேன்ல. ரஜினியும் நல்லா நடிச்சிருக்கான் பாரு! படம் முடிஞ்சு ஜனங்க போகும்போது, ரஜினிதான் அவுங்க மனசுல நிப்பான். தெரிஞ்சதுதானே! பரவாயில்லை. படம் நல்லா வந்திருக்கு. எனக்கு அதுதான் வேணும்.''

இவ்வாறு சிவாஜி கூறினார்.

பிறர் நன்றாக நடித்தால், மனந்திறந்து பாராட்டும் பண்பாளர் சிவாஜி.

10-8-1979-ல் வெளியான "நான் வாழவைப்பேன்'' நூறு நாள் ஓடிய வெற்றிப்படம்.

இவ்வாறு ஆரூர்தாஸ் கூறினார்.

No comments:

Post a Comment