குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை'
முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி
ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்த "ஆறிலிருந்து அறுபது வரை'' படம், மகத்தான வெற்றி பெற்று, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.
வில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும், ஸ்டைல் மன்னனாகவும் ஜொலித்து வந்த ரஜினியை, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைக்க பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் முடிவு செய்தார்.

முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி
ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்த "ஆறிலிருந்து அறுபது வரை'' படம், மகத்தான வெற்றி பெற்று, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.
வில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும், ஸ்டைல் மன்னனாகவும் ஜொலித்து வந்த ரஜினியை, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைக்க பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் முடிவு செய்தார்.

அதற்காக அவர் உருவாக்கிய கதைதான் "ஆறிலிருந்து அறுபது வரை.''
குடும்பப் பாசம்
சிறு வயதிலேயே பெற்றோரை இழக்கும் ஒரு சிறுவன், கஷ்டப்பட்டு தன் தம்பிகளையும், தங்கையையும் படிக்க வைக்கிறான். குடும்பத்துக்காக தன்னை மெழுகுவர்த்திபோல் அழித்துக் கொள்கிறான்.
ஆனால், 60 வயதாகும் தருணத்தில் அவருடைய குடும்பத்தினர் நன்றி விசுவாசத்தோடு நடந்து கொள்ளவில்லை.
இன்றைய உலக நடப்பை யதார்த்தமாகச் சித்தரிக்கும் கதை. வசனத்தையும் பஞ்சு அருணாசலம் எழுதினார்.
மாறுபட்ட வேடம்
இந்தப் படத்தில், ரஜினிக்கு சண்டை இல்லை, ஸ்டைல் இல்லை. குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்யும் நல்லவராக நடித்திருந்தார். 25 வயது முதல் 60 வயது வரையுள்ள பல தோற்றங்களில் தோன்றினார்.
ரஜினியுடன் படாபட் ஜெயலட்சுமி, சங்கீதா, ஜெயா, மல்லிகா, திலக், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தார்கள். பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசை அமைத்திருந்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.
புதிய தோற்றத்தில் ரஜனியை அவருடைய ரசிகர்கள் ஏற்பார்களா? படம் வெற்றி பெறுமா? என்று பலரும் சந்தேகப்பட்டார்கள்.
ரஜினியும், படத்தின் ரிசல்ட்டை ஆவலுடன் எதிர்பார்த்தார்.

16-9-1979-ல் வெளிவந்த இந்தப்படம், `ஓகோ' என்று ஓடியது. நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
`சிவாஜிகணேசன் நடிக்கும் குடும்பப் பாங்கான வேடங்களிலும் நன்கு நடிக்கக் கூடியவர் ரஜினி' என்பது, இப்படத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டது.
அந்த ஆண்டின் சிறந்த படமாக இதை சினிமா ரசிகர்கள் சங்கம் தேர்ந்தெடுத்தது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கும், சிறந்த டைரக்டருக்கான விருது எஸ்.பி.முத்துராமனுக்கும் கிடைத்தது.
இப்படம், "ஓ இண்டி கதா'' என்ற பெயரில் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது. தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடியது.
எஸ்.பி.முத்துராமன்
"ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தின் டைரக்டரான எஸ்.பி.முத்துராமன், அந்தப் படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி
கூறியதாவது:-"ரஜினி, ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும்போதும், அது பற்றிய முழு விவரத்தையும் கேட்டறிந்து, கதையை உள்வாங்கிக்கொண்டு, தான் நடிக்க வேண்டிய காட்சியை நன்கு சிந்தித்து ஜீரணித்துக்கொண்டு நடிப்பார்.
"ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிக்கு ஒரு சந்தேகம் வந்தது. "குடும்பத்துக்கே தன்னை தியாகம் செய்யும் அண்ணனிடம், உடன் பிறந்தவர்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்வார்களா?'' என்று கேட்டார்.
"பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதுதான் யதார்த்தம்'' என்று கதாசிரியர் பஞ்சு அருணாசலமும், நானும் விளக்கினோம். இருப்பினும், ரஜினி முழுவதுமாக திருப்தி அடையவில்லை.
இதன் காரணமாக பஞ்சு அருணாசலம் ஒரு முடிவுக்கு வந்தார். 5 ஆயிரம் அடி வரை படத்தை எடுத்து ரஜினிக்கு போட்டுக் காட்டுவது, அது அவருக்குப் பிடித்திருந்தால் தற்போதுள்ள கதையை தொடர்ந்து படமாக்குவது, இல்லாவிட்டால் கதையின் போக்கை மாற்றுவது - இதுதான் பஞ்சு அருணாசலத்தின் முடிவு.

இதை ரஜினியிடம் தெரிவித்தோம். அவர் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, 5 ஆயிரம் அடி வரை படம் எடுத்தோம். எடிட் செய்து, ரஜினிக்குப் போட்டுக்காட்டினோம்.
அவருக்கு முழு திருப்தி ஏற்பட்டது. "படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. படத்தை இதே மாதிரி தொடருங்கள்'' என்றார்.
அதேபோல் படத்தை எடுத்து முடித்தோம்.
விநியோகஸ்தர்களிடம், "படத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் வசூல் பற்றி கவலைப்படாதீர்கள். அதுபற்றி எங்களுக்குத் தகவலும் தெரிவிக்காதீர்கள். திங்கட்கிழமை வசூலைப் பாருங்கள். பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறதா என்று கவனியுங்கள். அதை எங்களுக்குத் தெரிவியுங்கள்'' என்றோம்.
நாங்கள் எண்ணியபடி திங்கட்கிழமை முதல், பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தைப் பார்த்தார்கள். வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது.
படம் பெரிய வெற்றி பெற்றதுடன், ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது.''
இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
No comments:
Post a Comment